2016-12-22 16:12:00

இரஷ்யத் தூதர் கொலைக்கு ஆர்த்தடாக்ஸ் தலைவர்கள் கண்டனம்


டிச.22,2016. அமைதிக்காக உழைத்த ஒரு நேரிய மனிதரை, மனிதாபிமானம் இல்லாத வகையில் கொன்றிருப்பது, பெரும் அதிர்ச்சியைத் தருகிறது என்று, கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தையும், கான்ஸ்டான்டிநோபிள் தலைமை ஆயருமான முதலாம் பார்த்தலோமேயு அவர்கள் கூறினார்.

இத்திங்களன்று துருக்கியின் அங்காரா நகரில் சுட்டு கொலை செய்யப்பட்ட இரஷ்யத் தூதர், Andrei Karlov அவர்கள் மரணம் குறித்து செய்தி வெளியிட்ட முதுபெரும் தந்தை பார்த்தலோமேயு அவர்கள், இவ்வாறு கூறினார்.

இரஷ்யத் தூதர், Andrei Karlov அவர்கள் கொலை செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டித்து, இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையின் தலைவர், கிரில் அவர்களும் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார் என்று, வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romano செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.

மேலும், மாஸ்க்கோவில் உள்ள மீட்பர் கிறிஸ்து பேராலயத்தில், Andrei Karlov அவர்களுக்கு இவ்வெள்ளியன்று நடைபெறும் இறுதிச் சடங்கினை, இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தந்தை கிரில் அவர்கள் தலைமையேற்று நடத்துகிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.