2016-12-14 15:49:00

செவித்திறன் அற்றோருக்கு திருத்தந்தையின் கிறிஸ்மஸ் வாழ்த்து


டிச.14,2016. 2016ம் ஆண்டு கிறிஸ்து பிறப்பு விழா, உங்களுக்கு புனிதமான ஒரு திருவிழாவாக அமையட்டும் என்ற வாழ்த்துக்களை, செவித்திறன் அற்றவர்களுக்கு ஒரு காணொளிச் செய்தியாக திருத்தந்தை அனுப்பியுள்ளார்.

இறைவனின் ஆசீர் உங்கள் மீது நிறைவாய் இறங்கட்டும் என்று இச்செய்தியில் வாழ்த்தியுள்ள திருத்தந்தை, தனக்காக செபிக்குமாறும் விண்ணப்பித்துள்ளார்.

திருத்தந்தையின் தனிப்பட்ட செயலர்களில் ஒருவரான அருள்பணியாளர், Yoannis Lahzi Gaid அவர்களின் டுவிட்டர் பக்கத்தில், திருத்தந்தையின் காணொளிச் செய்தி இப்புதனன்று வெளியானது.

செவித்திறன் மற்றும் பார்வைத்திறன் அற்றோர் மீது, திருத்தந்தையும், திருப்பீடமும் தனிக்கவனம் செலுத்தி வருகிறது என்பது, கடந்த யூபிலி ஆண்டில், ஜூன் 10 முதல் 12 முடிய வத்திக்கானில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் யூபிலி கொண்டாட்டங்களில் தெளிவானது.

மேலும், தனிப்பட்டவர்களின் திருமணங்களை முன்னின்று நடத்துவதை தன் வழக்கமாகக் கொண்டிராத திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த ஜூலை 9ம் தேதி, தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், செவித்திறனற்ற இருவருக்கு திருமண அருளடையாளத்தை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.