2016-12-13 15:48:00

கடவுளிடமிருந்து பெற்றுள்ள கொடைகளைச் சிந்தித்துப் பார்க்க...


டிச.13,2016. “நாம் ஒவ்வொருவரும், நமது கடந்த காலத்தையும், ஆண்டவரிடமிருந்து நாம் பெற்றுள்ள கொடைகளையும் சிந்தித்துப் பார்க்க வேண்டுமென்று இன்று நான் விரும்புகிறேன்” என்ற சொற்களை, இச்செவ்வாயன்று, தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், டிசம்பர் 17, வருகிற சனிக்கிழமையன்று, தனது எண்பதாவது பிறந்த நாளைச் சிறப்பிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்று காலை 8 மணிக்கு, பவுலினா சிற்றாலயத்தில், உரோம் நகரிலுள்ள கர்தினால்களுடன் சேர்ந்து கூட்டுத்திருப்பலி நிறைவேற்றுவார் என்று, திருப்பீடம் அறிவித்துள்ளது.

அன்றைய தினத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வழக்கமான தனது பணிகளில் ஈடுபடுவார் எனவும், அந்நாளில், மால்ட்டா அரசுத்தலைவர், ஆயர்கள் திருப்பேராயத் தலைவர், சுவிட்சர்லாந்து நாட்டின் Chur ஆயர், Nomadelfia குழு ஆகியோரைச் சந்திப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக் கூற விரும்புவோர், PopeFrancis80@vatican.va என்ற ஆங்கில மின்னஞ்சல் முகவரிக்கு எழுதலாம். மேலும், Papafranciscus80@vatican.va(இலத்தீன்),PapaFrancesco80@vatican.va(இத்தாலியம்), PapaFrancisco80@vatican.va(இஸ்பானியம்/போர்த்துக்கீசியம்),PapeFrancois80@vatican.va (பிரெஞ்ச்), PapstFranziskus80@vatican.va (ஜெர்மானியம்), PapiezFranciszek80@vatican.va (போலந்து) ஆகிய மொழிகளிலும் மின்னஞ்சல்கள் அனுப்பலாம். 

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், 80வது பிறந்த நாளை முன்னிட்டு, #Pontifex80 என்ற hashtag சமூக வலைத்தளமும் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.