2016-12-06 15:34:00

திருத்தந்தை : யூதாஸ், முழுமையாக வழிதவறிய ஆடு


டிச.06,2016. கடவுளின் கனிவன்பை அறியாதவர்கள், கிறிஸ்தவக் கோட்பாட்டை அறியாதவர்கள் என்று, இச்செவ்வாய் காலை சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலி மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வழிதவறிச் சென்ற ஆட்டை மீண்டும் கண்டுகொள்வதில், நம் ஆண்டவர் மகிழ்வடைவதை விளக்கும், இச்செவ்வாய் திருப்பலியின் நற்செய்தி வாசகத்தை மையப்படுத்தி, மறையுரையாற்றிய திருத்தந்தை, நம் ஆண்டவர், நம்மைத் தேடுவதை ஒருபோதும் நிறுத்திவிடாதவர் என்று கூறினார்.

வழிதவறிய ஆட்டிற்கு, நற்செய்தியில் உள்ள மிகச் சிறந்த எடுத்துக்காட்டு யூதாஸ் என்றுரைத்த திருத்தந்தை, யூதாஸ், தன் இதயத்தில், எப்போதுமே, ஏதோ ஒரு கசப்புணர்வைக் கொண்டிருந்த மனிதர் என்றும், இவர், கடவுளின் கருணையைப் புரிந்து கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார். யூதாஸ், மற்றவரைக் குறைசொல்லும் போக்கைக் கொண்டிருந்தார் எனவும், இவர், மற்றவரிலிருந்து விலகி இருந்து, எல்லாருடனும் இனிமையுடன் வாழத் தெரியாதவராய் இருந்தார் எனவும் மறையுரையில் கூறினார் திருத்தந்தை.

திசை காட்டும் கருவி இல்லாத காரணத்தினால், ஆடு வழிதவறுகிறது என்பதல்ல, ஆனால், அது, தீய இதயம் கொண்டிருப்பதாலே, வழி தவறுகிறது என்றும் கூறிய திருத்தந்தை, நம் ஆண்டவர் இதையெல்லாம் அறிந்திருப்பதால், அவர் அந்த ஆட்டைத் தேடிச் செல்கிறார் எனவும் கூறினார்.

வழிதவறிய ஆடு, ஆண்டவரை அவமதித்திருந்தபோதிலும், அவர் அதைக் கண்டைந்தபோது, அதை அவர் அவமதிக்கவில்லை எனவும், கெத்சமெனி தோட்டத்தில், யூதாசை, இயேசு நண்பா எனவே அழைத்தார் என்றும் கூறினார் திருத்தந்தை.   

திருவிவிலியத்தில் ஒரு சொல் உள்ளது, நம் ஆண்டவர் நல்லவர் என்பதே அச்சொல் எனவும், வழிதவறிய ஆட்டைத் தேடுவதில் அவர் ஒருபோதும் ஓயாதவர் எனவும் கூறினார் திருத்தந்தை.

நம் ஆண்டவர், ஒரு நீதிபதிபோல் வருவார், ஆனால், முழுவதும் கனிவன்பும், அக்கறையும் கொண்ட நீதிபதியாகவும், நம்மைத் தீர்ப்பிடுவதற்கு அல்ல, மாறாக, நம்மை மீட்பதற்கு அனைத்தையும் ஆற்றுகின்ற நீதிபதியாகவும், அவர் வருவார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கடவுளின் கனிவன்பை அறியாதவர்கள், கிறிஸ்தவக் கோட்பாட்டை அறியாதவர்கள் என்றும், ஆண்டவரால் அன்புகூரப்பட மறுப்பவர்கள் வழிதவறியவர்கள் என்றும் மறையுரையாற்றிய திருத்தந்தை, நம்மைத் தேற்றவரும் ஆண்டவரை, நம் காயங்களோடு எதிர்நோக்க, அவரிடமே அருள் வேண்டுவோம் என்றும் கூறினார்.

மேலும், “இப்புவியில் நம் வாழ்வுக்கு அர்த்தத்தையும், வரவிருக்கும் வாழ்வுக்கு நம்பிக்கையையும் தருகிறார் இயேசு” என, இச்செவ்வாயன்று தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.