2016-12-05 16:20:00

குடிபெயர்வோருக்கென அமெரிக்காவில் சிறப்பு செபநாள்


டிச.,05,2016. புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்வோரின் துன்ப நிலைகளை மனதில்கொண்டு, அவர்களுக்கென இம்மாதம் 12ம் தேதி, குவாதலூப்பே அன்னைமரி திருவிழாவன்று, செபநாளை சிறப்பிக்க உள்ளதாக அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் அறிவித்துள்ளனர்.

புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்வோர் குடும்பங்களின் நம்பிக்கைகளையும், அச்சங்களையும், தேவைகளையும்  இரக்கம் நிறைந்த கடவுளின் முன்வைக்கும் நாளாக, இந்த நாள் சிறப்பிக்கப்படும் என உரைத்த அமெரிக்க ஆயர்கள் பேரவைத் தலைவர், கர்தினால் டேனியல் டிநார்டோ அவர்கள், அகதிகள் மற்றும் குடிபெயர்வோர் அருகில் திரு அவை இருக்கிறது என்பதைக் காண்பிக்கும் விதமாக, அமெரிக்க ஐக்கிய நாட்டின் அனைத்து மறைமாவட்டங்களிலும் சிறப்பு செப வழிபாடுகளும், திருப்பலிகளும் இடம்பெறும் என்றார்.

குடிபெயர்வோர் குறித்த தற்போதைய கொள்கைகளில் ஏற்படும் மாற்றங்கள் எத்தகைய விளைவுகளை மக்களுக்குக் கொணரும் என்பது குறித்து கவலை கொள்ளும் குடும்பங்கள் அனைத்துடனும், அமெரிக்க ஐக்கிய நாட்டு திருஅவை ஒன்றித்திருப்பதாக ஆயர்கள் அறிவித்துள்ளனர்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.