2016-12-02 16:13:00

பாத்திமா அன்னை காட்சியின் நூறாம் ஆண்டுக்கு பரிபூரண பலன்கள்


டிச.02,2016. போர்த்துக்கல் நாட்டு, பாத்திமாவில், அன்னை மரியா காட்சி அளித்ததன் நூறாம் ஆண்டுக்கென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்குவதற்குத் தீர்மானித்துள்ள பரிபூரண பலன்களை, மூன்று வழிகளில் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விளக்கிய, பாத்திமா திருத்தல அதிபர் அருள்பணி André Pereira அவர்கள், பாத்திமா திருத்தலத்திற்குத் திருப்பயணம் செல்லுதல், பாத்திமா அன்னை திருவுருவத்தின் முன்பாகச் செபித்தல், பாத்திமா செல்ல இயலாதவர்கள், ஆன்மீக முறையில் இதில் பங்கெடுத்தல் ஆகிய மூன்று வழிகளில், இந்தப் பரிபூரண பலன்களைப் பெறலாம் எனக் கூறினார்.

வயது, நோய், மற்றும் பிற காரணங்களால், பாத்திமா திருத்தலத்திற்குத் திருப்பயணம் செல்ல இயலாதவர்கள், இவ்வாண்டு மே மாதம் முதல், 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை, ஒவ்வொரு மாதமும் 13ம் தேதி, பாத்திமா அன்னை திருவுருவத்தின் முன்பாகச் செபித்தால், இப்பலன்களைப் பெறலாம் என்று, அருள்பணி Pereira அவர்கள் கூறியுள்ளார்.

2016ம் ஆண்டு நவம்பர் 27, இஞ்ஞாயிறன்று தொடங்கியுள்ள இந்த நூற்றாண்டு நிகழ்வுகள், 2017ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி நிறைவடையும்.

திருத்தந்தை வழங்கும் பரிபூரண பலன்களைப் பெற விரும்புவோர், ஒப்புரவு அருளடையாளத்திற்குச் சென்று, திருப்பலியில் கலந்துகொண்டு திருநற்கருணை வாங்குதல், பாவ வாழ்வை விலக்கி நடத்தல், திருத்தந்தையின் கருத்துக்களுக்காகச் செபித்தல் ஆகியவற்றை நிறைவேற்ற வேண்டும். 

ஆதாரம் : CNA/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.