டிச.01,2016. கலாச்சாரம், ஆன்மீகம், கிறிஸ்துவின் மீது ஆழந்த பற்று என்ற பல வழிகளில் ஜார்ஜியா நாட்டு மக்கள் தன்னை அதிகம் கவர்ந்தனர் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த ஜார்ஜியா நாட்டுப் பிரதிநிதிகளிடம் கூறினார்.
இவ்வாண்டு செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1,2 ஆகிய நாள்கள், ஜார்ஜியா, அசர்பைஜான் ஆகிய நாடுகளில் திருத்தந்தை மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்திற்காக அவருக்கு நன்றி சொல்ல, ஜார்ஜியா நாட்டிலிருந்து வத்திக்கானுக்கு வருகை தந்த கத்தோலிக்கப் பிரதிநிதிகள் குழுவை, இவ்வியாழன் காலை, திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, இவ்வாறு கூறினார்.
ஜார்ஜியா நாட்டு கத்தோலிக்க சமுதாயம், பல்வேறு துன்பங்களையும், சவால்களையும் சந்தித்தாலும், மனம் தளராமல் முன்னோக்கிச் செல்வதற்கு தன் செபங்களும் ஆசீரும் உண்டு என்று திருத்தந்தை இப்பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்தார்.
மேலும், "இயேசுவை ஒவ்வொரு மனிதரிலும் காண்பதற்கு நம் நம்பிக்கை நம்மை அழைக்கிறது என்று சொன்ன அருளாளர் Charles de Foucauldவை இன்று நினைவுகூருகிறோம்" என்ற வார்த்தைகள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக அமைந்தன.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |