2016-11-28 16:44:00

அ.பணி கோல்வன்பாக் இறப்புக்கு திருத்தந்தை இரங்கல் செய்தி


நவ.28,2016. அகில உலக இயேசு சபையின் முன்னாள் தலைவர் அருள்பணி பீட்டர் ஹான்ஸ் கோல்வன்பாக் (Peter Hans Kolvenbach) அவர்கள், காலமானதையடுத்து, தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கும் தந்திச் செய்தியை, இத்திங்களன்று அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அகில உலக இயேசு சபையின் தற்போதைய தலைவர் அருள்பணி அர்த்தூரோ சோசா அபாஸ்கல் (Arturo Sosa Abascal) அவர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில், அருள்பணி கோல்வன்பாக் அவர்கள், கிறிஸ்துவுக்கும், அவரின் நற்செய்திக்கும், முழுவதும் பிரமாணிக்கமாக இருந்தார் எனவும், இது, அவர் தனது தலைமைப் பணியை, திருஅவையின் நன்மைக்காக, மிகுந்த மனத்தாராளத்துடன், தன்னை அர்ப்பணித்துப் பணியாற்றியதில் விளங்கியது எனவும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மறைந்த அருள்பணி கோல்வன்பாக் அவர்களின் ஆன்மா, இறைவனின் சாந்தியை அடைவதற்கு, இறை இரக்கத்தின் வழியாக, தான் செபிப்பதாகவும் அச்செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். 

அருள்பணி கோல்வன்பாக் அவர்களின் அடக்கச் சடங்கில், தான் ஆன்மீக முறையில் ஒன்றித்திருப்பதாகவும், அவரின் பிரிவால் வருந்தும் இயேசு சபை சகோதரர்களுக்கும், மற்றவர்களுக்கும், தனது அப்போஸ்தலிக்க ஆசீரை அளிப்பதாகவும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ் 

அருள்பணி கோல்வன்பாக் அவர்கள், லெபனான் நாட்டுத் தலைநகர் பெய்ரூட்டில், நவம்பர் 26, இச்சனிக்கிழமையன்று இறைவனடி எய்தினார். இவர் தனது 88வது வயதை, நவம்பர் 30, இப்புதனன்று நிறைவு செய்யவிருந்தார்.

அகில உலக இயேசு சபையின் 29வது தலைவராக, 1983ம் ஆண்டு பொறுப்பேற்ற அருள்பணி கோல்வன்பாக் அவர்கள், 2008ம் ஆண்டு, அப்பணியிலிருந்து ஓய்வு பெற்றார். 1928ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி, ஹாலந்து நாட்டின் Drutenல் பிறந்த இவர், தனது 19வது வயதில் இயேசு சபையில் சேர்ந்தார். இவர், 68 ஆண்டுகள் இயேசு சபை துறவியாகவும், 55 ஆண்டுகள் அருள்பணியாளராகவும், வாழ்ந்திருப்பவர். தனது 30வது வயதில் பெய்ரூட்டுக்கு மறைப்பணியாற்றச் சென்ற அருள்பணி கோல்வன்பாக் அவர்கள், 2016ம் ஆண்டு, நவம்பர் 26ம் தேதி பெய்ரூட்டில் காலமானார்.

ஏறக்குறைய 25 ஆண்டுகள், அகில உலக இயேசு சபையின் தலைவராகப் பணியாற்றியவர், அருள்பணி கோல்வன்பாக்.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.