2016-11-21 17:12:00

ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பிற்கு திருத்தந்தையின் கடிதம்


நவ.21,2016. இம்மாதம் 28 முதல் டிசம்பர் 4ம் தேதி வரை இலங்கைத் தலைநகரில் இடம்பெறவிருக்கும் FABC எனும் ஆசிய ஆயர் பேரவையின் 11வது ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்திற்கு கர்தினால் டெலெஸ்போர் டோப்போ வழியாக செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இக்கூட்டத்தில் கலந்துகொள்ள, இந்தியாவின் இராஞ்சி பேராயர், கர்தினால் டோப்போ அவர்களை, தன் பிரதிநிதியாக நியமித்துள்ள திருத்தந்தை, கர்தினாலுக்கு அனுப்பியுள்ள செய்தியில், தற்போது இலங்கையில் இடம்பெற உள்ள இந்த 11வது நிறையமர்வுக் கூட்டம், பண்டைய காலத்தில் துடிப்புள்ள மறைபோதகர்கள் ஆசிய கடற்கரைகளில் வந்திறங்கியதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்துவதாக உள்ளது என்று கூறியுள்ளார்.

ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் தலைவர், கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் அவர்களின் வழி நடத்தலில், இந்த ஆயர் பேரவையின் 11வது நிறையமர்வுக் கூட்டம், உயிர்துடிப்புடைய மத உணர்வுகளைத் தூண்டுவதாகவும், விசுவாசத்தை உறுதிப்படுத்துவதாகவும் அமையும் என்ற நம்பிக்கையையும், கர்தினால் டோப்போ அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் வெளியிட்டுள்ளார், திருத்தந்தை.

ஆயர்களின் அடுத்தவாரக் கூட்டத்திற்கு தன் ஆசீரையும் செபங்களையும் வழங்குவதாகவும் அதில் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.