அந்த சாந்திவனத்தில் வாழ்ந்த காட்டு அரசர் சிங்கம், ஒருநாள் மிருகங்களை தன் அரசவைக்கு வரும்படி அழைத்தது. சிங்கம் வாழ்ந்து வந்த குகையில், அது வேட்டையாடிய விலங்குகளின் எலும்புகள் அழுகிய நாற்றம் அடித்தன. அரசரின் அழைப்பைத் தட்ட முடியாமல், மிருகங்கள் எல்லாம் குகையில் கூடின. கூட்டத்திலிருந்த கரடி நாற்றம் தாளாமல் மூக்கைப் பிடித்துக் கொண்டது. இதைக் கவனித்த சிங்கம், கடும் கோபம் கொண்டு, கரடியை ஓங்கி ஓர் அறைவிட்டது. கரடி மயங்கி விழுந்தது. பின்னர், சிங்கம் மற்ற மிருகங்களைப் பார்த்து, "என் அரசவை நாற்றமெடுக்கிறதோ?" எனக் கர்ஜித்தது. இதைக் கேட்டுப் பயந்துபோன குரங்கு, "அப்படியில்லை அரசே! தங்கள் அவையோ ரோஜா மலரின் வாசனையால் மணக்கிறதே!" என்று மென்று விழுங்கியது. குரங்கு பொய் சொல்கிறது என்று புரிந்து கொண்ட சிங்கம், "கிண்டலா செய்கிறாய்?" என்றவாறு பளார் என ஓர் அறை விட்டது. குரங்கு கிறுகிறுவென்று சுற்றி மயங்கி விழுந்தது. இதைக் கண்டதும் மிருகங்களுக்கு உதறல் எடுத்தது. அங்கிருந்து ஒவ்வொன்றாய், மெதுவாக நழுவ ஆரம்பித்தன. நரி செல்வதை கவனித்துவிட்ட சிங்கம், நரியாரே! எங்கே நழுவுகிறீர்?" என்றது கோபத்துடன். "இல்லை! அரசே! எட்டிப் பார்த்தேன்! அவ்வளவுதான்!" என்று, நரி திருட்டு முழி முழித்தது. "சரி.. உன் கருத்தென்ன?, என் அரசவை உண்மையிலேயே நாறுகிறதா?" என்று கேட்டது சிங்கம். நரிக்கு தர்மசங்கடமாய்ப் போய்விட்டது. உண்மையைச் சொன்னாலும் ஆபத்து. பொய் சொன்னாலும் பேராபத்து. என்ன செய்யலாம்? என்று ஒரு நிமிடம் யோசித்தது நரி. கடைசியில், அது மூக்கை உறிஞ்சிக்கொண்டே, "அரசே மன்னிக்க வேண்டும்! இரண்டு நாளாய் கடுமையான சளி, காய்ச்சல். அதனால், எந்த வாசனையையும் என்னால் நுகர முடியாது என்றது சோகமாய்! சிங்கம், நரியின் பதிலால் மகிழ்ந்தது.
ஆம். 'விவேகம் என்றும் வெல்லும்!' என்பது இதுதான்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |