2016-11-12 15:10:00

டெல்லி காற்று மாசு உலக நாடுகளுக்கு ஓர் எச்சரிக்கை


நவ.12,2016.  இந்தியத் தலைநகர் டெல்லியைக் கடுமையாகப் பாதித்துள்ள காற்று மாசு கேடு பற்றிய செய்திகள் வெளிவரும் இவ்வேளையில், காற்று மாசு விவகாரத்தில், அனைத்து நாடுகளுமே மிகுந்த அக்கறை காட்ட வேண்டுமென, ஐ.நா.வின் குழந்தை நல நிறுவனமான யூனிசெப் கூறியுள்ளது.

டெல்லியில் காற்று மாசினால், சிறார் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்றும், டெல்லியின் நிலை, உலகினருக்கு ஓர் எச்சரிக்கையாகவும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் உள்ளது என்றும், யூனிசெப் கூறியது.

டெல்லியில் ஏற்பட்ட காற்று மாசினால், 5,798 பள்ளிகள் மூடப்பட்டன, இதனால், 44 இலட்சத்து 10 ஆயிரம் சிறார், மூன்று நாள்கள் பள்ளிக்குச் செல்லவில்லை என்றும், காற்று மாசு, டெல்லிக்கு மட்டுமல்ல, உலகுக்கே ஒரு சவாலாக உள்ளது என்றும், யூனிசெப் கூறியது.

காற்று மாசு அடைவதால், உலகில் மிகவும் ஆபத்தான பகுதிகளில், ஏறக்குறைய முப்பது கோடிச் சிறார் வாழ்கின்றனர் என்று அண்மை ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

மேலும், காற்று மாசுபடுவதால் சீனா, இந்தியா மற்றும் கம்போடியாவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும், உலகளவில் மரணங்கள் ஏற்படுவதற்கு, நான்காவது பெரிய காரணமாக காற்று மாசு உள்ளது எனவும் உலக வங்கியின் அறிக்கை கூறுகிறது.

ஆதாரம் : UN/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.