2016-11-08 15:28:00

உயிரியல் ஆயுதங்கள், பயங்கரவாதிகளால் வாங்கப்படுவது பேராபத்து


நவ.09,2016. உயிரியல் ஆயுதங்கள், சட்ட விரோதமாகப் பயங்கரவாதிகளால் தயாரிக்கப்படுவதும், விலைக்கு வாங்கப்படுவதும், உலக நலவாழ்வுக்கும், பாதுகாப்புக்கும் பேராபத்தைக் கொணரும் என, ஐ.நா.வில் தன் கவலையை வெளியிட்டார் திருப்பீட அதிகாரி இவான் யூர்கோவிச்.

உயிரியல் ஆயுதங்கள் குறித்து ஐ.நா.வில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய, ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அமைப்புக்களுக்குரிய திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர், பேராயர் யூர்கோவிச் அவர்கள், அறிவியல் கண்டுபிடிப்புக்களைக் கொண்டு, நோய்களைக் குணமாக்கி, மனிதரின் துன்பங்களை அகற்றுவதற்குப் பதில், மனிதரைக் கொல்வதற்கு அவைகளைப் பயன்படுத்துவது என்பது, மனித மாண்பிற்கு விரோதமான செயலாகும் என்று கூறினார்.

ஆயுதக் களைவுக்கும், வளர்ச்சிக்கும் இடையேயுள்ள நெருங்கிய தொடர்பைப் புரிந்துகொள்ளும்போது மட்டும்தான், நம்மால் அறிவியல் கண்டுபிடிப்புக்களை அமைதிக்கென பயன்படுத்த முடியும் எனவும் கூறினார் பேராயர்.

அமைதி மற்றும், நீதியின் இன்னொரு பெயரே வளர்ச்சி என்பதை மனதில்கொண்டு செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார் பேராயர் யூர்கோவிச்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.