நவ.03,2016. செய்தியாளர்களுக்கு எதிராக நிகழும் குற்றங்கள் பெருகி வருகின்றன என்றும், செய்தியாளர்கள் தாக்கப்படுதல், அல்லது, கொல்லப்படுதல் போன்ற குற்றங்களை நிறுத்த உடனடி முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும், ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
செய்தியாளர்களுக்கு எதிரான குற்றங்களிலிருந்து தப்பித்துவிடும் துணிச்சலை நிறுத்தும் உலக நாள், நவம்பர் 2, இப்புதனன்று கடைபிடிக்கப்பட்டதையொட்டி, செய்தி வெளியிட்டுள்ள பான் கி மூன் அவர்கள், இத்தகைய நெருக்கடியானச் சூழல்களிலும் துணிந்து பணியாற்றும் செய்தியாளர்களைப் பாராட்டினார்.
இந்த உலக நாள் இவ்வாண்டு, மியான்மார் நாட்டில் முதன் முறையாகச் சிறப்பிக்கப்படுவதை, தனிப்பட்ட முறையில் சுட்டிக்காட்டிய பான் கி மூன் அவர்கள், உலகின் பல நாடுகளில் இந்நாளைக் குறித்த விழிப்புணர்வு வளர்ந்து வருவது குறித்து தன் மகிழ்ச்சியை வெளியிட்டார்.
2013ம் ஆண்டு முதல் ஐ.நா. அவை இந்த உலக நாளைச் சிறப்பித்து வந்துள்ளது என்பதும், கடந்த 10 ஆண்டுகளில், உலகின் பல நாடுகளில் 800க்கும் அதிகமான செய்தியாளர்கள் கேள்வி கேட்பாரின்றி கொல்லப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கன.
ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |