2016-11-02 15:36:00

ஏழு குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு நச்சுக்காற்று பாதிப்பு


நவ.02,2016. உலகில் ஏழு குழந்தைகளில் ஒரு குழந்தை, வெளிப்புற காற்றில் உள்ள நச்சு அளவுகள், மிக அதிகமாக உள்ள இடங்களில் வாழ்வதாக, ஐ.நா. அவை குழந்தைகள் நல நிதி நிறுவனமான யூனிசெஃப் (UNICEF) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையொன்று தெரிவிக்கிறது.

குறிப்பாக, அந்த நச்சு அளவுகள், அனைத்துலக வழிமுறைகளில் வரையறுக்கப்பட்டுள்ள பாதுகாப்பான அளவுகளைக் காட்டிலும் ஆறு மடங்கு அல்லது அதைவிடவும் அதிகமான அளவில் இருப்பதாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

''குழந்தைகளுக்காக, காற்றைத் தூய்மையாக்குங்கள்'' (Clear the Air for Children) என்ற அமைப்பு, முதல் முறையாக, எத்தனைக் குழந்தைகள், உலக நலவாழ்வு நிறுவனம் (WHO) வரையறுத்துள்ள வழிமுறைகளை விட, அதிக அளவில் வெளிப்புற காற்று மாசடைந்துள்ள இடங்களில் உள்ளனர் என்றும், அவர்கள், எந்தெந்த நாடுகளில் உள்ளனர் என்றும், செயற்கைக்கோள் படங்கள் வழியே காட்டியுள்ளது.

நவம்பர் 7, அடுத்த திங்கள் முதல், 18ம் தேதி முடிய மொராக்கோவில், காலநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. அவை மாநாடு நடக்கவுள்ள நிலையில், உலகத் தலைவர்கள், தங்கள் நாடுகளில், காற்று மாசுபடுவதைத் தடுக்க, அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, யூனிசெஃப் அழைப்பு விடுத்துள்ளது.

''ஒவ்வோர் ஆண்டும், ஐந்து வயதுக்கும் குறைவான சுமார் 6 இலட்சம் குழந்தைகள் இறப்பதற்கு, காற்று மாசுபாடுதான் முக்கிய காரணி, மற்றும், இதுவே, ஒவ்வொரு நாளும், கோடிக்கணக்கானவர்களின் வாழ்க்கை மற்றும் எதிர்காலத்தை அச்சுறுத்தும் ஆபத்து'' என்று, யூனிசெஃப் அமைப்பின் நிர்வாக இயக்குநர் ஆண்டனி லேக் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அதிக அளவில் மாசடைந்த இடங்களில், 62 கோடி குழந்தைகள், தெற்கு ஆசிய நாடுகளில் வாழ்வதாகவும், அடுத்ததாக ஆப்பிரிக்கா நாடுகளில் 52 கோடி குழந்தைகள் வாழ்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆதாரம் : UN / பிபிசி / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.