2016-10-25 15:39:00

உலகில் பசியைப் போக்குவதற்கு அரசியல், சமூக அர்ப்பணம் அவசியம்


அக்.25,2016. உலகில் பசியைப் போக்கி, உணவுப் பாதுகாப்பையும், ஊட்டச்சத்துணவையும் மேம்படுத்தி, வேளாண்மையை ஊக்குவிக்கும் 2030ம் ஆண்டின் நீடித்திருக்கக்கூடிய முன்னேற்ற இலக்குகளை நாம் எட்டுவதற்கு, அரசியல் மற்றும் சமூக அளவில் அர்ப்பணம் அவசியம் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

வேளாண்மை வளர்ச்சி, உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்துணவு என்ற தலைப்பில், ஐ.நா.பொது அவையில் நடந்த அமர்வில், இத்திங்களன்று உரையாற்றிய, ஐ.நா.வுக்கான திருப்பீடப் பிரதிநிதி, பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள் இவ்வாறு கூறினார்.

பசியையும், வறுமையையும் வெறும் புள்ளி விபரங்களாகவும், அவை இயல்பானவை எனவும், அவற்றைத் தவிர்க்க முடியாத விவகாரமாகவும் நோக்கப்படும் போக்கை,  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எச்சரித்து, மனிதர்களுக்கு அல்ல, போர்களுக்கு ஊட்டப்படுகின்றன எனவும், பசியே, போரின் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றது எனவும் பேசியுள்ளதைக் குறிப்பிட்டுப் பேசினார் பேராயர் அவுசா.

2030ம் ஆண்டுக்குள், உணவு உற்பத்தியைப் பெருக்கி, உணவுப்பொருள்கள் நன்முறையில் விநியோகம் செய்யப்படுவதை மட்டுமல்ல, அமைதி, சமூக நீதி, பரிவு, புரிந்துணர்தல் போன்ற, மிகச்சிறந்த மனிதப் பணபுகளையும் நாம் வளர்க்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார் பேராயர் அவுசா.

உலகில், 1990ம் ஆண்டிலிருந்து பசியாய் இருப்போரின் எண்ணிக்கைக் குறைந்திருந்தாலும், இன்னும் உலகில், ஏறக்குறைய எண்பது கோடிப் பேர் ஊட்டச்சத்துணவின்றி உள்ளனர், 200 கோடிக்கு மேற்பட்ட மக்கள், கடும் ஊட்டச்சத்து பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளனர் என்ற ஐ.நா. அறிக்கையையும், பேராயர் அவுசா அவர்கள், சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.