2016-10-20 15:47:00

'கிறிஸ்துவை அறிந்துகொள்ளுதல்' - திருத்தந்தையின் மறையுரை


அக்.20,2016. மறைக்கல்வியைக் கொண்டு மட்டும் இயேசுவை நாம் அறிந்துகொள்ள இயலாது, மாறாக, செபம், ஆராதனை, நாம் பாவிகள் என்ற பணிவான உணர்வு ஆகியவற்றின் துணைகொண்டு நாம் அவரை அறிந்துகொள்ள முடியும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறையுரையில் கூறினார்.

இவ்வியாழன் காலை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றியத் திருப்பலியில், புனித பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்தில் கூறப்பட்டுள்ள வார்த்தைகளை மையப்படுத்தி, திருத்தந்தை வழங்கிய மறையுரையில் இவ்வாறு கூறினார்.

'கிறிஸ்துவை அறிந்துகொள்ளுதல்' என்ற கருத்தில் திருத்தூதர் பவுல் கூறியுள்ள வார்த்தைகள், அவர், தன் ஆராதனை, செபம், பணிவுணர்வு ஆகியவற்றின் பலனாக பெற்ற உண்மைகள் என்று, திருத்தந்தை தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.

'அறிவுக்கு எட்டாத கிறிஸ்துவின் அன்பை அறிந்து கொள்வதற்கு' விவிலிய அறிவோ, மறைக்கல்வி பாடங்களோ போதாது, அவற்றிற்கும் மேலாக, பணிவுடன் அவரை ஆராதிக்கும் மனநிலையால் கிறிஸ்துவை அறிந்துகொள்ள முடியும் என்று திருத்தந்தை தன் மறையுரையில் விளக்கிக் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.