2016-10-20 16:22:00

ஈராக் நாட்டில், உண்மையான குடியரசு மீண்டும் பிறக்கவேண்டும்


அக்.20,2016. ஈராக் நாட்டில், உண்மையான, நாகரீகம் மிக்க குடியரசு மீண்டும் பிறக்கவேண்டும் என்று, கத்தோலிக்க கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, லூயிஸ் ரஃபேல் சாக்கோ அவர்கள் விண்ணப்பித்துள்ளார்.

நினிவே பகுதியில் உள்ள மோசூல் நகரை, இஸ்லாமிய அரசு என்றழைக்கப்படும் தீவிரவாத குழுவிடமிருந்து விடுவிக்க தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள், நல்ல பலனைத் தரவேண்டும் என்ற வேண்டுதலுடன், முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் விடுத்துள்ள விண்ணப்பம், ஆசிய செய்தியில் வெளியிடப்பட்டுள்ளது.

நினிவே பகுதியிலும், ஈராக் முழுவதிலும் அமைதியை உறுதி செய்வதற்கு, அனைத்துலக சமுதாயம் ஒத்துழைக்க வேண்டும் என்றும், முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் தன் விண்ணப்பத்தில் கூறியுள்ளார்.

5000த்திற்கும் மேற்பட்ட தீவிரவாதிகள், 7 இலட்சத்திற்கும் அதிகமான மக்களை மோசூல் நகரில் பிணைக்கைதிகளாக வைத்துள்ளனர் என்றும், மோசூல் நகருக்கு அருகே 15 கி.மீ தூரத்தில் உள்ள கரகோஷ் நகரம் விடுதலை பெற்றுள்ளதை, அங்கு வாழும் கிறிஸ்தவர்கள் கொண்டாடினர் என்றும், ஆசிய செய்தி கூறுகிறது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.