2016-10-17 16:55:00

வாரணாசி நெரிசலில் உயிரிழந்த இந்து பக்தர்களுக்காக செபம்


அக்.17,2016. இந்தியாவின் வாரணாசி நகரில் கூட்ட நெரிசலில் கடந்த சனிக்கிழமையன்று 24 பேர் உயிரிழந்தது குறித்து, தன்  ஆழ்ந்த கவலையை தெரிவிக்கும் அனுதாபச் செய்தியை வெளியிட்டுள்ளார், மும்பை கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ்.

வாரணாசியில் பெருமெண்ணிக்கையில் கூடிய இந்துமத பக்தர்களிடையே, அவர்கள் கடந்துச் செல்லும் பாலம் ஒன்று உடைந்துக் கொண்டிருப்பதாக, வதந்தி ஒன்று பரவியதன் காரணமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 24பேர் இறந்தனர், எண்ணற்றோர் காயமடைந்தனர்.

இத்துயர நிகழ்வு குறித்து தன் கவலையை வெளியிட்ட, இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் கிரேசியஸ் அவர்கள், காயமுற்றவர்கள் அனைவருக்கும் தேவையான உதவிகளை, கத்தோலிக்க மருத்துவமனைகளும், பிறரன்பு இல்லங்களும் வழங்கும் என, தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

காயமடைந்தவர்களுடனும், இத்துயர சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுடனும், இந்தியத் திருஅவை தன் ஒருமைப்பாட்டை தெரிவிப்பதாக அறிவித்த கர்தினால் கிரேசியஸ் அவர்கள், வாரணாசி விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்காக இந்திய திரு அவை, தொடர்ந்து செபிக்கும் எனவும் கூறினார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.