2016-10-15 17:37:00

ஆறு பேரில் ஒருவருக்கே போதுமான ஊட்டச்சத்துணவு


அக்.15,2016. உலகிலுள்ள இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளில், ஆறு பேருக்கு  ஒருவர் என்ற முறையிலே, தங்களின் மூளை வளர்ச்சிக்குத் தேவையான போதுமான ஊட்டச்சத்து உணவைப் பெறுகின்றனர் என்று, ஐ.நா.வின் குழந்தை நல நிறுவனமான யூனிசெப் கூறியது.

அக்டோபர் 16, இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படும் உலக உணவு தினத்தை முன்னிட்டு, வெளியிட்டுள்ள புதிய அறிக்கை ஒன்றில், ஒரு குழந்தையின் முதல் இரண்டு வருடங்களில், போதுமான ஊட்டச்சத்து உணவைப் பெறுவது, அதன் முழு வளர்ச்சிக்கும், உயிர்வாழ்வுக்கும் இன்றியமையாதது என்று யூனிசெப் நிறுவனம் கூறியுள்ளது.

ஊட்டச்சத்து பற்றாக்குறைவால் துன்புறும் குழந்தைகளின் எண்ணிக்கை, கடந்த பத்து ஆண்டுகளில் குறைந்திருந்தாலும், ஐந்து வயதுக்குட்பட்ட 15 கோடியே 60 இலட்சம் சிறார், இப்பிரச்சனையை, தற்போதும் எதிர்கொள்கின்றனர் என்றும், யூனிசெப் கூறியுள்ளது.

தாய்ப்பால் கொடுப்பது, உலகில், எட்டு இலட்சத்துக்கு மேற்பட்ட குழந்தைகளின் வாழ்வைப் பாதுகாக்கும் மற்றும், உலகளாவியப் பொருளாதாரத்தில், ஒவ்வோர் ஆண்டும், 300 பில்லியன் டாலருக்கு மேற்பட்ட தொகையையும் அதிகரிக்கும் என்றும், யூனிசெப் கூறியுள்ளது.

“காலநிலை மாறிக்கொண்டு வருகிறது” என்ற தலைப்பில், 2016ம் ஆண்டின் உலக உணவு தினம், இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆதாரம் : UN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.