2016-10-14 16:02:00

தாய்லாந்து மன்னர் இறப்புக்கு திருத்தந்தை இரங்கல் செய்தி


அக்.14,2016. தாய்லாந்து நாட்டு மன்னர் பூமிபோல் அதுல்யதேஜ் (Bhumibol Adulyadej) அவர்கள் காலமானதை முன்னிட்டு, தனது இரங்கலையும், செபத்தையும் தெரிவிக்கும் தந்திச் செய்தியை, அந்நாட்டுப் பிரதமர் Prayut Chan-o-cha அவர்களுக்கு அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்நாள்களில் மிகவும் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் தாய்லாந்து அரச குடும்பத்தினர் மற்றும் நாட்டினருக்கு, தனது இதயப்பூர்வமான அனுதாபத்தைத் தெரிவிப்பதாக, அச்செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை.

ஞானம், மனஉறுதி, பிரமாணிக்கம் ஆகிய மரபுரிமைப் பண்புகள் கொண்ட மன்னர் பூமிபோல் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் இவ்வேளையில், தாய்லாந்து நாட்டு மக்கள் அனைவரும், அமைதிப் பாதையில், ஒன்றிணைந்து, தொடர்ந்து உழைப்பார்கள் என்ற தனது நம்பிக்கையையும், அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கடந்த 70 ஆண்டுகளாக தாய்லாந்து நாட்டின் மன்னராகப் பணியாற்றிய பூமிபோல் அதுல்யதேஜ் அவர்கள், தனது 88வது வயதில், இவ்வியாழனன்று காலமானார். உலகில், நீண்டகாலம் ஆட்சியில் அமர்ந்திருந்த அரசர் என்ற சிறப்புப் பெற்ற பூமிபோல் அவர்கள், அந்நாட்டு மக்களால் தந்தையாகப் போற்றப்பட்டவர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.