2016-10-07 16:04:00

புலம்பெயர்ந்தோர் உரிமைகள் அமல்படுத்தப்பட அழைப்பு


அக்.07,2016. புலம்பெயர்ந்தோருக்கு உதவ, மேலும் பொருளாதார மற்றும் நிதி முதலீடுகள் செய்வதோடு, அம்மக்கள் குறித்த தற்போதைய உரிமைகளுக்கு உறுதி வழங்கப்பட்டால், புலம்பெயர்ந்தோரை ஏற்கும் நாடுகளிலும்கூட, அவர்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாய் இருப்பார்கள் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஜெனீவாவில் நடைபெற்ற, UNHCR என்ற ஐ.நா.வின் புலம்பெயர்ந்தோர் நிறுவனத்தின் 67வது உயர்மட்ட கூட்டத்தில் உரையாற்றிய பேராயர் Ivan Jurkovič அவர்கள், புலம்பெயர்ந்தோர் குறித்த அண்மை நியூ யார்க் அறிக்கை நல்லதோர் அடையாளம், ஆயினும் அவ்வறிக்கை அமல்படுத்தப்படுவது அவசியம் என்பதை வலியுறுத்தினார்.

இக்காலத்தில் புலம்பெயர்ந்தோர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டி, அதற்கான தீர்வுகளையும் பரிந்துரைத்த பேராயர் Jurkovič அவர்கள், இன்று உலகில், ஏறக்குறைய 6 கோடியே 53 இலட்சம் மக்கள், கட்டாயமாகப் புலம்பெயர்ந்தவர்கள் என்றார்.

மக்கள் பெருமளவில் புலம்பெயர்வதற்குரிய மூலக்காரணங்களைக் களைவதற்கு, உடனடி அரசியல் மற்றும் பன்முனை முயற்சிகளுக்குத் திருப்பீடம் அழைப்பு விடுத்து வருவதையும் குறிப்பிட்டார், ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலகங்களுக்கான திருப்பீட பிரதிநிதி பேராயர் Jurkovič.

மக்கள் பெருமளவில் புலம்பெயர்வதற்கு, ஆயுத வர்த்தகம், ஊழல் போன்ற விவகாரங்கள் காரணமாக உள்ளன என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியிருப்பதையும், ஐ.நா. கூட்டத்தில் குறிப்பிட்ட பேராயர் Jurkovič அவர்கள், மக்கள் புலம்பெயர்தலைத் தடுப்பதற்கு நடவடிக்கை, அம்மக்களுக்குப் பாதுகாப்பு, அப்பிரச்சனைக்கான தீர்வுகள்  ஆகிய மூன்றும் ஒன்றோடொன்று தொடர்புள்ளவை என்றும் கூறினார்.

உலகிலுள்ள ஏறக்குறைய 6 கோடியே 53 இலட்சம் கட்டாயமாகப் புலம்பெயர்ந்த மக்களில், 2 கோடியே 13 இலட்சம் பேர் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் கூறினார் பேராயர் Jurkovič.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.