2016-10-01 15:30:00

தன்னார்வத் தொண்டர்களுக்கு திருத்தந்தை வழங்கிய வாழ்த்துரை


அக்.01,2016. அன்பு சகோதர, சகோதரிகளே, கிறிஸ்துவின் சீடர்களுக்கே உரிய கனிவு, பிறரன்பு என்ற முத்திரைகளை நீங்கள் இவ்வுலகில் பதிக்கிறீர்கள். இந்நாட்டில் இயங்கிவரும் பல பிறரன்புப் பணி மையங்களின் பிரதிநிதிகள் நீங்கள். உங்கள் ஒவ்வொருவருக்கும் என் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

பல வழிபாட்டு முறைகளைத் தொடரும் விசுவாசிகளிடையே கூட்டுறவு நிலவுகிறது என்பதை, நீங்கள் மேற்கொண்டுள்ள பயணம் வெளிப்படுத்துகிறது. இப்பயணத்தை, முழு மூச்சுடன் தொடருங்கள்.

முதியோர், நோயுற்றோர் அனைவருக்கும், அவர்களுக்கென பணியாற்றும் ஒவ்வொருவருக்கும் என் சிறப்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இறைவன் எப்போதும் உங்கள் அருகில் இருக்கிறார், உங்களுக்குச் செவிமடுக்கிறார். உங்கள் துன்பங்களில் இயேசு தன்னையே இணைத்துக்கொள்ள விரும்புகிறார்.

பணியாற்றும் திருஅவையின் நற்கனிகளாக விளங்குவன, பிறரன்பு முயற்சிகள். இறை இரக்கத்தை வெளிப்படுத்தி, நம்பிக்கையைத் தருவன, பிறரன்புப் பணிகள்.

எனவே, அன்பு சகோதர, சகோதரிகளே, உங்கள் பணி மிக உன்னதமானது! இறைவன் தானாக உவந்து வழங்கும் அன்பிற்கு ஓர் அடையாளமாக விளங்கும் தூய கன்னி மரியா, உங்களைக் காத்து, வழிநடத்துவாராக. இறைவனின் ஆசீர் உங்களைத் தாங்கி நிற்பதாக!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.