2016-09-23 15:41:00

வத்திக்கான் ஊடகத்துறையினரைச் சந்தித்த திருத்தந்தை


செப்.23,2016. செப்டம்பர் 22, இவ்வியாழன் மாலை 5 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பீடத்தின் ஊடகத்துறை தலைவர், அருள்பணி தாரியோ எதொவார்தோ விகனோ அவர்களையும், இத்துறையின் செயலர், அருள்பணி லூச்சியோ ரூயிஸ் அவர்களையும், இத்துறையின் ஆலோசனைக் குழுவினருடன் திருப்பீடத்தில் சந்தித்தார்.

அக்டோபர் முதல் தேதியன்று தன் முழுமையான பணிகளைத் துவக்கும் ஊடகத்துறையின் உயர்மட்ட அதிகாரிகளை திருத்தந்தை வாழ்த்தியதோடு, இத்துறைக்கென உருவாக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகள் அடங்கிய பிரதியை அவர்களிடம் வழங்கினார்.

வத்திக்கானில் இயங்கிவரும் பல்வேறு ஊடகப்பணிகளை ஒருங்கிணைக்க, 2015ம் ஆண்டு, ஜூன் 27ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் உருவாக்கப்பட்ட திருப்பீட ஊடகத் துறையில், தற்போது வத்திக்கானில் இயங்கிவரும் அனைத்து ஊடகப் பணிகளும் ஒருங்கிணைக்கப்படும்.

இந்த ஒருங்கிணைப்பின் முதல் கட்டமாக, வத்திக்கான் வானொலியும், வத்திக்கான் தொலைக்காட்சி நிலையமும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து, அடுத்த சில ஆண்டுகளில், வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romano, புகைப்படத் துறை, இணையத்தளம் ஆகிய அனைத்து துறைகளும் திருப்பீட ஊடகத் துறையில் ஒருங்கிணைக்கப்படும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.