2016-09-23 16:09:00

2030ம் ஆண்டு முன்னேற்ற இலக்குகள் குறித்து கர்தினால் பரோலின்


செப்.23,2016. 2030ம் ஆண்டிற்குள் நீடித்திருக்கக்கூடிய முன்னேற்ற இலக்குகளை நாம் அடைவதற்கு ஐ.நா. வகுத்துள்ள திட்டங்கள் நம்பிக்கை தருகின்றன என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த ஆண்டு, ஐ.நா.பொது அவையில் கூறியதை, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், செப்டம்பர் 22, இப்புதனன்று மீண்டும் அதே அவையில் நினைவுகூர்ந்தார்.

செப்டம்பர் 19, கடந்த திங்கள் முதல், ஐ.நா. பொது அவையில் நடைபெறும் 71வது அமர்வில் திருப்பீடத்தின் சார்பில் கலந்துகொண்டு கருத்துக்களைப் பகிர்ந்துவரும் கர்தினால் பரோலின் அவர்கள், இப்புதனன்று வழங்கிய உரையில், ஐ.நா. பொது அவை மேற்கொண்டு வரும் முயற்சிகளைப் பாராட்டினார்.

காலநிலை மாற்றத்தை மையப்படுத்தி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், பாரிஸ் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தன் உரையில் சுட்டிக்காட்டிய கர்தினால் பரோலின் அவர்கள், இந்த முடிவுகளை நடைமுறைப்படுத்துவது, அரசுகள், தொழில் நிறுவனங்கள், வர்த்தக அமைப்புக்கள் அனைத்தின் கூட்டு முயற்சி என்பதையும் வலியுறுத்தினார்.

எந்த ஒரு முன்னேற்றமும் சட்ட திட்டங்கள் வழியே, வெளியிலிருந்து திணிக்கப்பட முடியாது என்பதையும், மனிதர்கள் இந்த முன்னேற்றத்தின் முக்கிய காரணிகளாகச் செயல்படவேண்டும் என்பதையும் கர்தினால் அவர்களின் உரை எடுத்துரைத்தது.

மேலும், முன்னேற்றம் என்பதன் அளவுகோல் முழு மனித முன்னேற்றமே தவிர, அது, பொருளாதாரம், வர்த்தகம் இவற்றை அளவுகோலாக கொண்டிருக்கக் கூடாது என்பதையும் திருப்பீடச் செயலர், கர்தினால் பரோலின் அவர்கள் தன் உரையில் நினைவுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.