2016-09-15 16:49:00

பக்ரீத் விழாவையொட்டி இந்திய ஆயர்களின் வாழ்த்துக்கள்


செப்.15,2016. செப்டம்பர் 13, இச்செவ்வாயன்று, இஸ்லாம் சமயத்தினர் பக்ரீத் விழாவைக் கொண்டாடிய வேளையில், இந்திய ஆயர் பேரவையின் சார்பில் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வழங்கப்பட்டன.

"ஆபிரகாமின் அர்ப்பணிப்பு, கீழ்ப்படிதல், தன் மகனையே பலிதரும் அளவு அவர் கொண்டிருந்த தியாக உணர்வு ஆகியவற்றைக் கொண்டாடும் பக்ரீத் திருநாளன்று, அவரது மனம், இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்குமே ஓர் உந்து சக்தியாக இருக்கட்டும்" என்ற வார்த்தைகள் அடங்கிய வாழ்த்து அறிக்கையை, இந்திய ஆயர் பேரவையின் பொதுச் செயலர், ஆயர் தியடோர் மஸ்கரேனஸ் அவர்கள் அனுப்பினார்.

கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் தங்கள் மத நம்பிக்கைகளின் வழி நடப்பதையும், உடன் பிறந்த உணர்வை வளர்ப்பதையும் இந்த விழா நமக்கு நினைவுறுத்தட்டும் என்று ஆயர் மஸ்கரேனஸ் அவர்களின் வாழ்த்து வலியுறுத்தியது.

இந்தியாவெங்கும் கொண்டாடப்பட்ட பக்ரீத் விழா, ஊரடங்கு சட்டம் அமலில் இருந்த காஷ்மீர் மாநிலத்திலும், பெங்களூரு நகரத்திலும் கொண்டாடப்பட்டது என்று, UCAN செய்திக்குறிப்பு கூறுகிறது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.