2016-09-15 16:19:00

திருத்தந்தையைச் சந்தித்த ஐக்கிய அரபு குடியரசுகளின் இளவரசர்


செப்.15,2016. ஐக்கிய அரபு குடியரசுகளின் இளவரசர், Mohammed Bin Zayed bin Sultan Al-Nahyan அவர்களை, இவ்வியாழன் காலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பீடத்தில் சந்தித்துப் பேசினார்.

40 நிமிடங்கள் நீடித்த இச்சந்திப்பில் இளவரசர் Al-Nahyan அவர்களுடன், மூன்று பெண்கள் உட்பட, 10 பேர் அடங்கிய ஒரு குழு பங்கேற்றது. இச்சந்திப்பிற்குப் பின், இக்குழுவினர், திருப்பீடச் செயலகத்திற்கும் சென்றனர்.

ஐக்கிய அரசு குடியரசுகளின் இளவரசர், Al-Nahyan அவர்கள், ஆப்கானிஸ்தானில் உருவாக்கப்பட்ட, பலவண்ணம் கொண்ட, அழகான கம்பளம் ஒன்றை, பரிசாக அளித்தார். அந்தக் கம்பளம் நெய்யும் பிறரன்பு நிறுவனத்திற்கு, தன் மகளே பொறுப்பானவர் என்று இளவரசர் திருத்தந்தையிடம் விளக்கினார்.

திருத்தந்தையும், அமைதியைக் குறிக்கும் பதக்கம் ஒன்றை, இளவரசருக்குப் பரிசாக அளித்தார்.

மேலும், "இன்றைய மனித சமுதாயத்தை சந்திப்பதற்கு, இவ்வுலகின் வழிகளில் இயேசுவுடன் நடக்க திருஅவை அழைக்கப்பட்டுள்ளது" என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழனன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் காணப்பட்டன.

"இயேசு சிலுவையிலிருந்தும், மரியா, சிலுவையின் அடியிலிருந்தும் வழங்கிய மன்னிப்பு எவ்வளவு பரந்து விரிந்ததோ, அதைப்போன்று, திருஅவையின் மன்னிப்பும் அமையவேண்டும்" என்ற செய்தி, திருத்தந்தையின் டுவிட்டர் பக்கத்தில், செப்டம்பர் 14, திருச்சிலுவை உயர்த்தப்பட்ட திருநாளன்று வெளியானது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.