2016-09-15 16:03:00

திருத்தந்தை: எந்நிலையிலும் நமக்கொரு தாய் இருக்கிறார்


செப்.15,2016. அனாதையாக்கப்படும் உணர்வு மேலோங்கியிருக்கும் இன்றைய உலகில், நம்முடன் துணை வர ஒரு தாய் தேவை என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் மறையுரை வழங்கினார்.

செப்டம்பர் 15, இவ்வியாழனன்று, துயருறும் அன்னை மரியா திருவிழாவின் திருப்பலியை நிகழ்த்தியத் திருத்தந்தை, இன்றைய விழா நம்மை கல்வாரிக்கு, இயேசுவின் காலடிக்கு அழைத்துச் செல்கிறது என்று குறிப்பிட்டார்.

ஏனைய சீடர்கள் அனைவரும் தப்பித்து ஓடிவிட்ட நிலையில், புனித யோவான் மட்டும் இயேசுவின் தாயோடு சிலுவைக்கடியில் நின்றார் என்பதை, தன் மறையுரையில் சிறப்பாகக் குறிப்பிட்டத் திருத்தந்தை, தன் மகனைப் பற்றி சொல்லப்பட்ட அத்தனை அவதூறான சொற்களையும் தன் காதுபடக் கேட்ட அத்தாய், மகன் மீது முழு நம்பிக்கை கொண்டு, சிலுவைக்கடியில் அவருக்குத் துணையாக நின்றார் என்று எடுத்துரைத்தார்.

தான் புவனஸ் அயிரெஸ் பேராயராகப் பணியாற்றியபோது, சிறைக்கைதிகளைச் சந்திக்கச் சென்ற அனுபவத்தை தன் மறையுரையில் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குற்றவாளியென முத்திரை குத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்த தங்கள் மகன்களைக் காணக் காத்திருந்த அன்னையரை, மரியன்னைக்கு ஒப்புமைப்படுத்திப் பேசினார்.

கிறிஸ்தவர்களாகிய நாம் அனாதைகள் அல்ல, எந்த ஒரு துயரத்திலும் அன்னை மரியாவின் அரவணைப்பு நமக்கு உண்டு என்பதை, பல ஆன்மீக அறிஞர்கள் நமக்குக் கூறியுள்ளனர் என்று திருத்தந்தை தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.

அனாதையாக்கப்பட்ட உணர்வால் அலைக்கழிக்கப்படும் இவ்வுலகில், நமக்கென ஒரு தாய் இருக்கிறார்; தவறுகளால் நாம் வெட்கமடைந்தாலும், நம்மருகே மரியன்னை எப்போதும் இருக்கிறார் என்ற நம்பிக்கையை வளர்த்துக்கொள்வோமாக என்று, திருத்தந்தை, தன் மறையுரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.