2016-09-10 15:29:00

“நினிவே நிவாரணம்”அமைப்புக்கு திருத்தந்தை ஆதரவு


செப்.10,2016. ஈராக்கில் புலம்பெயர்ந்துள்ள மக்களுக்கு மருத்துவ உதவிகளை ஆற்றிவரும் “நினிவே நிவாரணம்” என்ற மனிதாபிமான அரசு-சாரா அமைப்பிற்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஐ.எஸ். இஸ்லாமிய அரசைச் சார்ந்த போராளிகளின் ஆக்ரமிப்பிலுள்ள, ஈராக்கின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதி நகரங்களை மீட்பதற்கு, ஈராக் இராணுவம் கடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இவ்வேளையில், ஆயுத மோதல்களுக்குப் பயந்து வெளியேறும் மக்களுக்கு, எர்பில் நகரிலுள்ள மருத்துவர்கள் உதவி வருகின்றனர்.

2015ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட, நினிவே நிவாரணம் என்ற அமைப்பிற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனிப்பட்ட விதத்தில் உதவியுள்ளார்.

இந்த அரசு-சாரா அமைப்பு, இரு ஆரம்ப நலவாழ்வு மையங்களை நடத்தி வருகிறது. இது, நாட்டுக்குள்ளே புலம்பெயர்ந்துள்ள மக்களுக்குத் தேவையான எல்லா வகையான  மருத்துவ உதவிகளையும் அளித்து வருகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.