2016-09-09 16:39:00

"இறுதி உரையாடல்கள்" புதிய நூல் விலைமதிப்பற்றது


செப்.09,2016. முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் நேர்காணல்கள் அடங்கிய புதிய நூல், விலைமதிப்பற்றது என்று தெரிவித்துள்ளார், ஜோசப் இராட்சிங்கர் அமைப்பின் தலைவர் இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி.

"இறுதி உரையாடல்கள்(The Last Conversations)" என்ற தலைப்பில், இத்தாலிய மொழியில், இவ்வெள்ளியன்று விற்பனைக்கு வந்துள்ள, இப்புதிய நூல் பற்றி வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த, அருள்பணி லொம்பார்தி அவர்கள், இந்நூலில் இரு மிக முக்கிய கூறுகள் உள்ளன என்று தெரிவித்தார்.

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், தற்போது வாழ்ந்துவரும் வாழ்வு, சான்று பகருவதாக அமைந்துள்ளது என்றும், அவர் வாழ்வின் இறுதிக் காலம், கடவுளைச் சந்திப்பதற்குத் தயாரிப்பதாக உள்ளது என்றும், இது, மிக முக்கியமான, ஆழமான, ஆன்மீகம் நிறைந்த மற்றும் விசுவாசத்திற்குச் சான்று பகர்வது என்றும் தெரிவித்தார் அருள்பணி லொம்பார்தி.

இந்த நூலின் தலைப்பு, இந்த நூலுக்கு நியாயப்படுத்துவதாக உள்ளது எனவும், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், தனது வாழ்வில் கடவுளின் பிரசன்னத்தை எப்படி அனுபவிக்கிறார் என்பதை அவர் விளக்கியிருப்பது, மிகவும் சிறப்பாக உள்ளது எனவும் அருள்பணி லொம்பார்தி அவர்கள் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.