2016-09-07 16:58:00

புனித அன்னை தெரேசா தொடர்ந்து பாடங்கள் புகட்டி வருகிறார்


செப்.07,2016. புனித அன்னை தெரேசா விண்ணிலிருந்து இன்னும் பலருக்கு தன் பரிந்துரையின் வழியே உதவிகள் செய்து வருகிறார் என்பதை, தனக்கு வந்து சேரும் சாட்சியப் பதிவுகளில் காண முடிகிறது என்று, அன்னை தெரேசாவின் புனிதர்பட்ட முயற்சிகளை ஒருங்கிணைத்த அருள்பணி Brian Kolodiejchuk அவர்கள் கூறியுள்ளார்.

அன்னை தெரேசா உருவாக்கிய பிறரன்பு மறைப்பணியாளர்கள் துறவு சபையின் ஆண்கள் பிரிவில் உறுப்பினராக இருக்கும் அருள்பணி Kolodiejchuk அவர்கள், ZENIT கத்தோலிக்க செய்திக்கு அளித்த பேட்டியில், புனித அன்னை தெரேசா தொடர்ந்து நமக்கு பாடங்கள் புகட்டி வருகிறார் என்று கூறினார்.

"இரக்கத்திற்கு அழைப்பு: அன்புகூர மனங்களும், பணியாற்ற கரங்களும்" (“A Call to Mercy: Hearts to Love, Hands to Serve”) என்ற தலைப்பில், அன்னையின் பல புதிய கூற்றுகள் அடங்கிய புதிய நூல், கடந்த வாரம் வெளியானதைச் சுட்டிக்காட்டிய அருள்பணி Kolodiejchuk அவர்கள், அன்னையின் கருத்துக்களை தொடர்ந்து கற்றுக்கொள்ள, இரக்கத்தின் யூபிலி ஆண்டு நல்லதொரு வாய்ப்பு என்று எடுத்துரைத்தார்.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன், "வாருங்கள், என் ஒளியாக வாழுங்கள்" (“Come Be My Light”) என்ற தலைப்பில் அன்னையின் கூற்றுகள் அடங்கிய நூலை தான் வெளியிட்டபோது, அது பலருக்கு ஆச்சரியத்தையும், ஒரு சிலருக்கு அதிர்ச்சியையும் தந்தது என்று கூறிய அருள்பணி Kolodiejchuk அவர்கள், புதிய புனிதரின் வாழ்வும், கருத்துக்களும் நமக்குச் சவாலாக அமைந்துள்ளன என்று கூறினார்.

புனித அன்னை தெரேசாவை பணியாற்றத் தூண்டியது, ஒரு கொள்கை அல்ல, மாறாக, இயேசு என்ற உயிருள்ள ஓர் ஆள் என்று கூறிய அருள்பணி Kolodiejchuk அவர்கள், சிறியோருக்குச் செய்ததை எனக்கேச் செய்தீர்கள் என்று இயேசு கூறியதை முற்றிலும் ஏற்று, வாழ்வாக்கியவர், அன்னை தெரேசா என்று எடுத்துரைத்தார்.

ஆதாரம் : ZENIT / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.