2016-09-07 16:25:00

திருத்தந்தையின் உரைகள் அடங்கிய இரண்டாவது தொகுப்பு


செப்.07,2016. “நாம் மனம் வருந்தும்போது, இறைவன் எப்போதும் நம்மீது பரிவு கொள்கிறார்” என்ற வார்த்தைகள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக இப்புதனன்று வெளியிடப்பட்டன.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய மறையுரைகள், புதன் மறைக்கல்வி உரைகள், மூவேளை செப உரைகள், மற்றும், ஏனைய நாடுகளில் அவர் வழங்கிய உரைகள், இன்னும், அவர் எழுத்து வடிவில் வெளியிட்ட செய்திகள் ஆகியவற்றின் தொகுப்பு ஒரு நூலாக வெளியிடப்பட்டுள்ளது.

வத்திக்கான் வெளியீட்டகத்தின் முயற்சியால் வெளியாகியுள்ள இந்த இரண்டாவது நூலில், 2014ம் ஆண்டு, ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் முடிய திருத்தந்தை வழங்கிய உரைகளும், செய்திகளும் தொகுக்கப்பட்டுள்ளன.

தென் கொரியாவில் 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஆசிய இளையோர் நாள் நிகழ்வுகளில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கலந்துகொண்டு வழங்கிய உரைகள், மற்றும் அல்பேனியா, துருக்கி ஆகிய நாடுகளில் மேற்கொண்ட திருத்தூதுப் பயணங்களில் வழங்கிய உரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

மேலும், FAO எனப்படும் உலக உணவு மற்றும் வேளாண்மை மையத்தில் 2014ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி வழங்கிய உரையும், நவம்பர் 25ம் தேதி, Strasbourg நகரில் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கிய உரையும் இந்நூலில் வெளியிடப்பட்டுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.