ஒரு குடிகாரர், தன் இரண்டு காதுகளிலும் கொப்புளங்களோடு தெருவில் போய்க்கொண்டிருந்தார். அவரைப் பார்த்த அவருடைய நண்பர், உனக்கு எப்படி கொப்புளம் ஏற்பட்டது என்று கேட்டார். அதற்கு அவர், துணிகளைத் தேய்த்துக் கொண்டிருந்த என் மனைவி, மின்சார இணைப்பைத் துண்டிக்காமல் அப்பெட்டியை அப்படியே வைத்துவிட்டு, சமையல் அறைக்குப் போய்விட்டார். நான் அந்த மின்இணைப்பைத் துண்டிக்கப் போனேன். அந்த நேரம் பார்த்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. நான் தவறுதலாக, அந்தப் பெட்டியை என் காதில் வைத்துவிட்டேன் என்றார். சரி, இன்னொரு காதிலும் கொப்புளம் இருக்கிறதே என்று நண்பர் கேட்டார். அதற்கு அந்தக் குடிகாரர், அந்த மடையன், மறுபடியும் தொலைபேசியில் பேசினான் என்றார்.
அன்பர்களே, இதைச் சொன்ன மறைந்த இயேசு சபை அருள்பணி அந்தோனி டி மெல்லோ அவர்கள், பெரும்பாலான மனிதர்க்கு ஆணவம் இருக்கிறது. அதனால், தாங்கள் செய்யும் தவறுகள், தங்களையே பாதிக்கும் என்ற உண்மை, அவர்களுக்கு ஒருபோதும் புரிவதில்லை. தாங்கள் செய்யும் ஒவ்வொரு தவறும், தங்களையே பாதிக்கும் என்பதை மக்கள் தெரிந்துகொண்டால், அவர்கள் ஒருபோதும் தவறு செய்யமாட்டார்கள் என்று கூறியுள்ளார். ஆம். தன்வினை தன்னையே சுடும்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |