2016-08-23 16:06:00

ஜகார்த்தாவில் பசித்திருக்கும் சிறாருடன் இரக்கத்தின் ஆண்டு


ஆக.23,2016. ஏழைச் சிறார்க்குச் சத்தான உணவு வழங்கி, இரக்கத்தின் யூபிலி ஆண்டை சிறப்பித்துள்ளது ஜகார்த்தா உயர்மறைமாவட்டம்.

இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தா உயர்மறைமாவட்டம், இம்மாதம் 20ம் தேதி, தேவையில் இருக்கும் ஏறத்தாழ நூறு சிறார்க்கு, உணவு வழங்கியது என்றும், இச்சிறாரில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள் என்றும், UCA செய்தி நிறுவனம் கூறியது.

இரக்கத்தின் யூபிலி ஆண்டில், நம்மை மட்டும் நினைக்காமல், நமது தன்னலத்தைக் கைவிட்டு, உதவி தேவைப்படும் மக்களை நினைத்துப் பார்க்க வேண்டுமென்று, இந்நிகழ்வை ஏற்பாடு செய்த சோவியா துஜா அவர்கள் கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்து, கடந்த ஆண்டு டிசம்பர் 8ம் தேதி முதல் சிறப்பிக்கப்பட்டுவரும் இரக்கத்தின் சிறப்பு யூபிலி, வருகிற நவம்பர் 20ம் தேதி கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று நிறைவடையும்.

ஆதாரம் :  UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.