2016-08-22 16:45:00

துருக்கி குண்டுவெடிப்பால் உயிரிழந்தோருக்கு திருத்தந்தை செபம்


ஆக.,22,2016.  சனிக்கிழமையன்று துருக்கி நாட்டின் திருமண விழா ஒன்றில் இடம்பெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 54 பேர் உயிரிழந்தது மற்றும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தது குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டு, அந்நாட்டு மக்களுக்காக செபிக்கும்படி அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்பு நிறைந்த நாடாகிய துருக்கியில் இடம்பெற்ற வெடிகுண்டு தாக்குதல் குறித்து, தான் மிகுந்த கவலை கொண்டதாக, தன் ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  இறந்தவர்களுக்காகவும், வாழ்வோருக்காகவும் இறைவனை வேண்டும் அதேவேளை, அந்நாட்டு மக்களனைவருக்கும் அமைதி கிட்ட வேண்டும் என இறைஞ்சுவோம் எனவும் விண்ணப்பித்தார்.

தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களோடு இணைந்து ஒரு நிமிட மௌன அஞ்சலியை கடைப்பிடித்த திருத்தந்தை, அவர்களோடு இணைந்து 'அருள்நிறை மரியே' என்ற செபத்தையும் செபித்தார்.

ஆகஸ்ட் 20, கடந்த சனிக்கிழமையன்று, துருக்கியின் தென்கிழக்கு மாவட்டமான Gaziantepன் திருமண விழா ஒன்றில், தற்கொலைக் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டதில் 54 பேர் கொல்லப்பட்டனர், ஏறத்தாழ நூறுபேர் காயமடைந்தனர்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.