2016-08-22 16:33:00

ஆகஸ்ட் மாத இலங்கை கத்தோலிக்க விழாக்களில் 4 இலட்சம் பக்தர்கள்


ஆக.,22,2016.  இம்மாதம் இலங்கையின் இரு முக்கிய கத்தோலிக்கத் திருத்தலங்களைச் சந்தித்தவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்தைத் தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 7ம் தேதி கொண்டாடப்பட்ட புனித அன்னா திருவிழாவையொட்டி, இலங்கையின் Thalawila திருத்தலத்திலும், ஆகஸ்ட் 15ம் தேதி மடு மாதா திருத்தலத்திலும் கூடிய கிறிஸ்தவர்கள் மற்றும் கிறிஸ்தவரல்லாதாரின் எண்ணிக்கை 4 இலட்சத்தைத் தாண்டியுள்ளதாக கூறும் செய்தி நிறுவனங்கள், ஆன்மீகக் குணமளித்தலுடன், திருப்பயணிகளுக்கான மருத்துவ உதவிகளும் வழங்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளன.

இரு திருத்தலங்களுக்கும் வந்த மக்களுக்கு மருத்துவ முகாம்கள் வழியே, இலவச மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

Thalawila புனித அன்னா திருத்தலத்தில், சிலாவ் ஆயர், வலென்ஸ் மென்டிஸ், மற்றும் கொழும்பு துணை ஆயர், இம்மானுவேல் ஃபெர்னாண்டோ ஆகியோர் விழாத் திருப்பலியை நிறைவேற்றினர்.

அதேவேளை, மன்னார் மறைமாட்டத்தின் வன்னி மடுமாதா திருத்தலத்தில், கொழும்பு பேராயர், கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள், மரியின் விண்ணேற்பு விழாத் திருப்பலியை நிறைவேற்றினார்.

ஆதாரம் :  AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.