2016-08-18 15:48:00

மும்பையில், பேராயர் இரஃபேல் சென்னத் அடக்கத் திருப்பலி


ஆக.18,2016. வாழ்வைத் தொலைத்தவர்கள், சமுதாயத்தால் ஒடுக்கப்பட்டோர், கடைநிலையில் வாழ்வோர் இவர்களுக்கென தன் வாழ்வின் 42 ஆண்டுகளை அர்ப்பணித்தவர், பேராயர் இரஃபேல் சென்னத் அவர்கள், என்று, கட்டக் புவனேஸ்வர் பேராயர் ஜான் பார்வா அவர்கள் கூறினார்.

ஆகஸ்ட் 14, கடந்த ஞாயிறன்று, தன் 82வது வயதில் இறையடி சேர்ந்த கட்டக் புவனேஸ்வர் முன்னாள் பேராயர் சென்னத் அவர்களின் அடக்கத் திருப்பலி, இப்புதனன்று மாலை, மும்பை அந்தேரியில் உள்ள திரு இருதய ஆலயத்தில் நடைபெற்ற வேளையில், பேராயர் பார்வா அவர்கள், திருவிருந்து முடிந்தபின் ஆற்றிய நன்றி உரையில் இவ்வாறு கூறினார்.

மும்பை பேராயர், கர்தினால் ஆசுவால்ட் கிரேசியஸ் அவர்கள் தலைமையில் நிகழ்ந்த கூட்டுத் திருப்பலியில், 16 பேராயர்கள், ஆயர்கள் உட்பட, பலநூறு அருள் பணியாளர்கள் கலந்துகொண்டனர் என்று ஆசிய செய்தி கூறியுள்ளது.

வறியோரின் சார்பில், குறிப்பாக, கந்தமால் வன்முறைகளில் துன்புற்றவர்களின் சார்பில் பேராயர் சென்னத் அவர்கள் மேற்கொண்ட போராட்டம் வெற்றியில் முடிந்ததைக் கண்டபின், இன்னும் தொடர்ந்து போராடும் நம்பிக்கை தங்களுக்கு உருவாகியிருப்பதாக, பேராயர் பார்வா அவர்கள் தன் நன்றி உரையில் குறிப்பிட்டார்.

அடக்கத் திருப்பலிக்குப் பின்னர், பேராயர் இரஃபேல் சென்னத் அவர்களின் உடல், அருகில் உள்ள இறைவார்த்தை சபை கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டதென்று ஆசிய செய்திக்கு குறிப்பு கூறுகிறது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.