2016-08-15 15:53:00

திருத்தந்தை : தூய ஆவியாரால் பற்றி எரியுங்கள்


ஆக.15,2016. இஞ்ஞாயிறு நண்பகலில், வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த விசுவாசிகளுக்கு மூவேளை செப உரை வழங்கியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அச்சத்தால் பின்வாங்காமல், தூய ஆவியாரால் பற்றி எரியுங்கள் என்று, கிறிஸ்தவர்களைக் கேட்டுக்கொண்டார்.

மண்ணுலகில் தீ மூட்டவே வந்தேன் என்ற இயேசுவின் திருச்சொற்களைக் கொண்ட இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையப்படுத்தி உரை வழங்கியத் திருத்தந்தை, அச்சத்தால் பின்வாங்கும், குளிரான அல்லது வெது வெதுப்பான கிறிஸ்தவர்கள் அல்ல, ஆனால், தூய ஆவியாரால் பற்றி எரியும் கிறிஸ்தவர்களே திருஅவைக்குத் தேவை என்று கூறினார்.

தங்கள் வாழ்வை இழக்க வேண்டியச் சூழல் ஏற்பட்டாலும், நற்செய்தி அறிவிப்பதற்குத் தங்களையே அர்ப்பணிக்கும் கிறிஸ்தவர்கள் திருஅவைக்குத் தேவை என்று, மேலும் கூறினார் திருத்தந்தை.

இயேசுவின் ஆறுதலளிக்கும் திருச்சொற்களையும், அவரின் திருவருளையும் ஒவ்வொரு மனிதருக்கும் எடுத்துச் செல்வதில் ஆர்வமுள்ள கிறிஸ்தவர்கள், திருஅவைக்குத் தேவை என்றும், இந்த ஆர்வம், தூய ஆவியாரின் தீ என்றும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருஅவை, இந்தத் தீயைப் பெறாமலோ அல்லது தன் வாழ்வில் நுழைய அனுமதிக்காமலோ இருந்தால், அது, வாழ்வை வழங்குவதற்குத் திறனற்ற, குளிரான அல்லது வெது வெதுப்பான திருஅவையாக இருக்கும் என்றும் எச்சரித்தார் திருத்தந்தை.

இயேசு பேசிய தீ, நாம் திருமுழுக்குப் பெற்ற நாளிலிருந்து, நம்மில் பிரசன்னமாக இருந்து செயலாற்றும் தூய ஆவியார் என்றும், தூய்மைப்படுத்தி புதுப்பிக்கும் படைப்பாற்றல் கொண்ட இத் தீ, ஒவ்வொரு மனிதத் துன்பத்தையும், தன்னலத்தையும், பாவத்தையும் எரித்து விடுகிறது என்றும், இது நம்மில் மாற்றத்தை உண்டாக்கி, நம்மைப் புதுப்பித்து, அன்புகூரும் சக்தியுள்ளவர்களாக நம்மை மாற்றுகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உலகெங்கும் மிகுந்த அன்போடும், உண்மையோடும், தங்களின் வாழ்வையும் பணயம் வைத்து, நற்செய்தி அறிவிப்புக்குத்  தங்களை அர்ப்பணித்துள்ள பல அருள்பணியாளர்கள், அர்ப்பண வாழ்வு வாழ்பவர், பொதுநிலை விசுவாசிகள், அனைவருக்கும், தனது பாராட்டையும் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆகஸ்ட் 14, இஞ்ஞாயிறன்று, பிறரன்பின் மறைசாட்சி புனித மாக்ஸ்மிலியன் கோல்பே அவர்களை, நினைவுகூர்கின்றோம், கடவுள் மற்றும் பிறர்மீது அன்புத் தீயில் நாம் வாழ்வதற்கு, இப்புனிதர் கற்றுத்தருவாராக என்று இறைஞ்சி, இம்மூவேளை செப உரையை நிறைவு செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.