2016-08-12 15:33:00

ஐ.நா.வின் உலக இளையோர் தினம் ஆகஸ்ட் 12


ஆக.12,2016. நாம் வாழும் இவ்வுலகில் நிலையான மாற்றங்களை உருவாக்க, இளையோர் எடுக்கும் முயற்சிகளுக்கு, உலகினர் அனைவரும் ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார் ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன்.

இக்கால உலகை அச்சுறுத்தும் ஏழ்மைக்கும், மிகுந்த செல்வத்திற்கும் இடையே, கடும் பசிக்கும், உணவுப்பொருள் வீணாக்கப்படுதலுக்கும் இடையே, வளமான இயற்கை வளங்களுக்கும், தொழிற்சாலைகளின் மாசுகேடுகளுக்கும் இடையே நிலவும் முரண்பாடுகளால், இளையோர், நேரிடையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறியுள்ளார் பான் கி மூன்.

ஐ.நா.வின் 2030ம் ஆண்டின் வளர்ச்சித்திட்ட இலக்குகளுக்கு மையமாக விளங்கும் இவ்விவகாரங்களுக்கு, இளையோரால் தீர்வு காண முடியும் என்றும் கூறியுள்ளார் பான் கி மூன்.

ஆகஸ்ட் 12, இவ்வெள்ளியன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக இளையோர் தினத்திற்கென வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார் பான் கி மூன்.

உலகின் கடந்தகாலப் போக்குகளை முறியடித்து, மேலும் உறுதியான   வருங்காலத்தை அமைப்பதற்கு இளையோரால் இயலும் என்றும், பான் கி மூன் அவர்களின் செய்தி கூறுகிறது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.