ஆக.01,2016. இயேசு சபை அருள்பணி ஃபெதரிக்கோ லொம்பார்தி அவர்கள், திருப்பீட செய்தித் தொடர்பாளர் பணியிலிருந்து ஓய்வு பெறுவதையொட்டி, போலந்திலிருந்து விமானத்தில் திரும்பிவந்த வழியில், பிரியாவிடை நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்து, அதில் கலந்து கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கான் வானொலியில் 25 ஆண்டுகளுக்கு மேலும், திருப்பீட தகவல் துறை தலவராக 10 ஆண்டுகளாகவும் பணியாற்றிய அருள்பணி லொம்பார்தி அவர்களுக்கு நன்றி கூறுவதாக உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருள்பணி லொம்பார்தி அவர்களுடன் இணைந்து, கேக் வெட்டி, இதனைச் சிறப்பிப்போம் என உரைத்தார்.
இந்தப் பணி ஓய்வு நிகழ்வில் அருள்பணி லொம்பார்தி அவர்களைப் பாராட்டிப் பேசிய பிரெஞ்சு பத்திரிகையாளர் Antoine-Marie Izoard அவர்கள், திருப்பீடத் தகவல் துறைத்தலைவராக 10 ஆண்டுகள் இரு திருத்தந்தையர்களின் கீழ் பணியாற்றியுள்ள அருள்பணி லொம்பார்தி அவர்கள், பத்திரிகையாளர்களுடன் நல்ல உறவை கடைபிடித்தார் என்றும், நகச்சுவையுடன் தங்கள் கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் வல்லவர் என்றும் பாராட்டினார்.
புனித இஞ்ஞாசியாரின் திருவிழாவன்று இந்த இயேசு சபை அருள்பணியாளரின் பணிஓய்வு விழா இடம்பெறுவதையும் சுட்டிக்காட்டிய பத்திரிகையாளர் Izoard அவர்கள், அருள்பணி லொம்பார்தி அடுத்து தொடரவிருக்கும் பணிகளுக்கு பத்திரிகையாளர் சார்பில் நன்றியையும் வாழ்த்துக்களையும் வெளியிட்டார்.
திருத்தந்தையர்களின் பயணத்தில் 37 ஆண்டுகளாக உதவி வந்த மவுரோ என்பவருக்கும் இதே நாளில் பணி ஓய்வு பிரியா விடை நிகழ்ச்சி இதே விமானத்தில் இடம்பெற்றது. இவ்விருவருடன் இணைந்து கேக் வெட்டி இருவருக்கும் தன் வாழ்த்துக்களை வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |