2016-07-23 14:56:00

கிரக்கோவுக்கு ஆசிய விழுமியங்களோடு செல்லும் ஆசிய இளையோர்


ஜூலை,23,2016. போலந்து நாட்டின் கிரக்கோவ் நகரில் நடைபெறவிருக்கும் 31வது உலக இளையோர் தின நிகழ்வுக்குச் செல்லும் ஆசிய இளையோர், ஆசிய விழுமியங்களை எடுத்துச் செல்கின்றனர் என்று இந்திய தலத்திருஅவை அதிகாரி ஒருவர் கூறினார்.

கிரக்கோவில் நிகழவிருக்கும் உலக இளையோர் தினக் கொண்டாட்டங்களில், பெருமளவில் ஆசிய இளையோர் கலந்துகொள்வது, திருஅவையின் வசந்த காலமாக அமையும் என்று கூறினார், ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ்.

கிரக்கோவ் உலக இளையோர் தினம் பற்றி ஆசியச் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த, மும்பை பேராயர் கர்தினால் கிரேசியஸ் அவர்கள், இந்நிகழ்வில், எண்ணிக்கை, உயிர்த்துடிப்பு, அழகு ஆகியவற்றில் மட்டுமல்ல, ஆசியாவின் பன்மைக் கலாச்சாரம், விருந்தோம்பல் மற்றும் குடும்ப மதிப்பீடுகளை வெளிப்படுத்துவதிலும் ஆசிய இளையோர் சிறந்து விளங்குவார்கள் என்றும் தெரிவித்தார்.

ஆசிய இளையோர் பிரதிநிதிகளில் பலர், புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களைப் பார்த்திருக்கின்றனர் மற்றும் அவரின் அன்பை உணர்ந்திருக்கின்றனர் என்றுரைத்த கர்தினால் கிரேசியஸ் அவர்கள், இத்திருத்தந்தை மீது ஒருவித நன்றியுணர்வோடும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மீது அன்பு கொண்டும் இதில் கலந்து கொள்வார்கள் என்று தெரிவித்தார்.  

ஜூலை 26, வருகிற செவ்வாயன்று தொடங்கும் 31வது உலக இளையோர் தினத்தில், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், மியன்மார், பிலிப்பைன்ஸ் என, பல ஆசிய நாடுகளிலிருந்து இளையோர் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.

ஆதாரம் : Asianews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.