ஜூலை,21,2016. ஜூலை 22, இவ்வெள்ளியன்று, பாகிஸ்தான், பைசலாபாத் மறை மாவட்டத்தில் உலக இளையோர் நாள் சிறப்பிக்கப்படும் என, அம்மறை மாவட்டத்தின் ஆயர் ஜோசப் அர்ஷத் அவர்கள் அறிவித்துள்ளார் என்று, ஆசிய செய்தி கூறுகிறது.
இவ்வெள்ளியன்று, பைசலாபாத்தின் புனித பேதுரு, பவுல் பேராலயத்தில் நடைபெறும் சிறப்புத் திருப்பலியின் இறுதியில், இளையோர் கரங்களில் சிலுவை ஒன்று ஒப்படைக்கப்படும் என்றும், இந்த இளையோர் நாள் சிலுவை அடுத்த ஓராண்டு, பாகிஸ்தானில் உள்ள அனைத்து மறை மாவட்டங்களிலும் திருப்பயணமாக எடுத்துச் செல்லப்படும் என்றும், ஆயர் அர்ஷத் அவர்கள் கூறினார்.
மறை மாவட்டங்களின் ஒவ்வொரு பங்கிலும், இளையோரின் கண்காணிப்பில், இச்சிலுவை இரண்டு வாரங்கள் வைக்கப்பட்டிருக்கும் என்றும் ஆயர் அர்ஷத் கூறினார்.
இந்த ஓராண்டு திருப்பயணத்தின் இறுதியில், இச்சிலுவை, திருத்தூதர் புனித தோமாவின் அருள்பணி பயிற்சி இல்லத்தில் வைக்கப்படும் என்றும், பாகிஸ்தானில், இறை அழைத்தல் பெருகுவதற்கு சிறப்பு செபங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் ஆயர் அர்ஷத் அவர்கள் விளக்கிக் கூறினார்.
ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |