2016-07-19 15:52:00

ஏழை நாடுகளுக்கு நீதி வழங்கும் உலகளாவிய வியாபார அமைப்பு முறை


ஜூலை, 19,2016. அனைவருக்கும், குறிப்பாக, ஏழை நாடுகளுக்கு நீதியை வழங்கும் உலகளாவிய வியாபார அமைப்பு முறையை உருவாக்க, பல காலமாகவே திருப்பீடம் வலியுறுத்தி வருகிறது என ஐ.நா.வின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சி அவையில் உரையாற்றினார், திருப்பீடப் பிரதிநிதி பேராயர் Ivan Jurkovič.

UNCTAD எனப்படும் ஐ.நா.வின் உலக வர்த்தகம் மற்றும் வளர்ச்சி அவையின் கென்யா கூட்டத்தில், ஜெனிவாவிலுள்ள ஐ.நா. அலுவலகங்களில் திருப்பீடப் பிரதிநிதியாகப் பணியாற்றும் பேராயர் Jurkovič அவர்கள்,  உரையாற்றுகையில், நீதியும் சரிநிகர் தன்மையும் அற்ற வியாபாரக் கொள்கைகளால் ஏழை நாடுகள் அனுபவித்து வரும் துன்பங்களை எடுத்தியம்பினார்.

ஏழை நாடுகளில் விவசாய உற்பத்தியை ஊக்குவித்தல்,  இயற்கையைப் பாதுகாத்தல் என்ற இரண்டும் ஒத்திணங்கிச் செல்ல வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்திய பேராயர், பெருமளவான வியாபாரத்தை மட்டுமே மனதில் கொண்டு செயல்படும்போது, சிறு விவசாயிகள் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது எனபதையும் சுட்டிக்காட்டினார்.

பெரிய நாடுகளின் வியாபாரப் பேரங்களில், சிறு நாடுகளின் நலன் புறக்கணிக்கப்படும் நிலை உருவாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறிய பேராயர் Jurkovič அவர்கள், வெளிநாட்டுக் கடனால், ஏழைநாடுகள் அனுபவிக்கும் துன்பங்களும் கருத்தில் எடுக்கப்பட வேண்டும் என விண்ணப்பித்தார்.

ஏழை நாடுகளின் கடன்கள் மன்னிக்கப்படுவது அவற்றின் வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவுவதாக இருக்கும் எனவும் எடுத்துரைத்தார் பேராயர் Jurkovič. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.