2016-07-16 15:18:00

21வது உலக எய்ட்ஸ் கருத்தரங்குக்கு முன்தயாரிப்பு


ஜூலை,16,2016. தென்னாப்ரிக்காவில் வரும் வாரத்தில் 21வது உலக எய்ட்ஸ் கருத்தரங்கு ஆரம்பிக்கவுள்ளவேளையில், எய்ட்ஸ் நோயாளர்க்கென பணியாற்றும் கத்தோலிக்க நிறுவனங்கள் இவ்வெள்ளியன்று முன்தயாரிப்பு கூட்டம் ஒன்றை டர்பனில் தொடங்கியுள்ளன.

தெற்கு ஆப்ரிக்க கத்தோலிக்க எய்ட்ஸ் நிறுவனங்களின் உதவியுடன், அனைத்துலக காரித்தாஸ் நிறுவனம், கத்தோலிக்க HIV-எய்ட்ஸ் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து இந்த மூன்று நாள் முன்தயாரிப்பு கூட்டத்தை நடத்துகின்றன.

கத்தோலிக்கத் திருஅவை, எய்ட்ஸ் நோயாளர்க்கு ஆற்றும் பணிகளில் கவனிக்க வேண்டிய நன்னெறி மற்றும் இறையியல் கூறுகள் பற்றி அலசி ஆராயும் நோக்கத்தோடு இக்கூட்டம் நடத்தப்படுகின்றது.

அதோடு, 21வது உலக கருத்தரங்கிற்கும் இக்கூட்டத்தினர் தங்களின் பரிந்துரைகளை முன்வைப்பார்கள்.

டர்பன் நகரில் வருகிற திங்கள்(ஜூலை18-22,2016) முதல் வெள்ளி வரை நடைபெறும் ஐந்து நாள் 21வது உலக எய்ட்ஸ் கருத்தரங்கில், ஏறக்குறைய இருபதாயிரம் பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. டர்பன் நகரில் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும், உலக எய்ட்ஸ் கருத்தரங்கு நடைபெறவுள்ளது.

தென்னாப்ரிக்காவில், ஒவ்வொரு வாரமும் இரண்டாயிரம் இளம்பெண்கள் வீதம் HIV நோய்க் கிருமிகளால் பாதிக்கப்படுகின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.