2016-07-06 15:26:00

இது இரக்கத்தின் காலம்... – பிறர் துன்பத்தில் இன்பம் காணாதே


ஒரு பணக்கார மாணவன் காலையில் நடைப்பயணம் செய்து கொண்டிருந்தபோது, வழியில் அவனுடைய ஆசிரியரைக் கண்டான். இருவரும் உரையாடிக்கொண்டே அவர்களுடைய நடைப் பயணத்தை தொடர்ந்தனர். செல்லும் வழியில் ஒரு பழைய சட்டையையும், காலணியையும் மற்ற துணிகளையும் கண்டனர். அந்த மாணவன் ஆசிரியரிடம், ‘அந்த ஆடைகள் இங்குள்ள வயல்வெளியில் வேலை செய்பவர்களுடையதாக இருக்கும். இந்த ஆடைகளை ஒளித்து வைத்து விளையாடினால் எப்படியிருக்கும்?’ என்று கேட்டான். அதற்கு ஆசிரியரோ, ‘மற்றவர்களைத் துன்பப்படுத்தி அதில் நீ மகிழ்வு காண்பது ஒரு நல்ல மனிதருக்கு அழகல்ல. விளையாட்டிற்குக்கூட மற்றவர்கள் நம்மால் துன்பப்படக் கூடாது. நீ அவர்களிடம் விளையாடவேண்டும் என்று முடிவெடுத்து விட்டாய், எனவே நான் சொல்வதைப்போல் விளையாடு. நீ பணக்கார மாணவன் தானே, உன் கைகளில் அணிந்திருக்கும் இந்த மோதிரத்தை நீ அவர்களுக்கு கொடுக்க மனம் இருந்தால், அந்த விவசாயியின் பழைய சட்டைப் பையில் இந்த மோதிரத்தை வைத்துவிட்டு ஒளிந்திருந்து நடப்பவற்றை பார்’என்றார். அந்த மாணவனும் அவ்வாறே செய்தான். ஒரு வயதான விவசாயி, அவருடைய ஆடையை எடுத்து அணியும்போது அவருடைய சட்டைப் பையில் இருந்த மோதிரத்தைக் கண்டார். பிறகு சுற்றிச் சுற்றிப் பார்த்தார். அவர் கண்களுக்கு யாருமே தென்படவில்லை. உடனே கதறி அழ ஆரம்பித்தார், ‘இறைவா, என் மனைவி நோய்வாய்ப்பட்டு வீட்டில் இருக்கிறாள். அவளைக் குணப்படுத்த என்ன வழி என்று உன்னிடம் புலம்பினேன். யாரோ ஒரு நல்லவர் மூலமாக இந்த தங்க மோதிரத்தை எனக்கு அனுப்பி வைத்துவிட்டாயே, உனக்கும் இந்த மோதிரத்தை வைத்துவிட்டுச் சென்ற அந்த நல்ல மனிதருக்கும் நன்றி. என் மனைவியைக் குணப்படுத்த இது போதும் இறைவா’என்று அந்த முதியவர் அழுதார். அதைப் பார்த்த அந்த மாணவன் மெய்சிலிர்த்து, அவன் கண்களில் நீர் ஒடியது. ஆசிரியர் மாணவனைப் பார்த்து ‘நீ சொல்வதுபோல் செய்திருந்தால், மனவருத்தம்தான் மிஞ்சியிருக்கும். இந்த விளையாட்டால் உன் மனம் பேரானந்தத்திற்கு உள்ளாகியுள்ளது’ என்றார். அந்த மாணவனும், ‘இனி என் மனதால்கூட மற்றவர்களுக்கு தீங்கு நினைக்கமாட்டேன்’ என்று உறுதி கூறினான். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.