2016-07-05 16:41:00

ஐ.எஸ் தாக்குதல்கள் உலகை ஆளும் நோக்கம் கொண்டவை


ஜூலை,05,2016. ஐ.எஸ். இஸ்லாமிய அரசின் பாக்தாத் படுகொலை, இந்த உலகம் முழுவதும் தனது ஆளுகைக்குள் உள்ளது என்ற செய்தியைப் பரப்பவதாகத் தெரிகின்றது என்றும், இந்தக் கருத்தியல், உண்மையான அணுகுண்டு என்றும் கூறினார் பாக்தாத் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை இரஃபேல் லூயிஸ் சாக்கோ.

ஐ.எஸ். இஸ்லாமிய அரசு, இராணுவ பலத்தை இழந்துள்ளதால், இடங்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் புவியியல் பற்றி தற்போது சிந்திப்பது கிடையாது, ஆனால், அது, எல்லா இடங்களையும் தாக்கி, எவ்வளவு பேரைப் பலியாக்க முடியுமோ அவ்வளவு பேரைப் பலியாக்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கின்றது என்று, மேலும் கூறினார் முதுபெரும் தந்தை சாக்கோ.

கடந்த சனிக்கிழமையன்று ஐ.எஸ். அரசின் இரட்டைக் குண்டு வெடிப்புத் தாக்குதலுக்கு உள்ளான, பாக்தாத்தின் கராடா மாவட்டத்தைப் பார்வையிட்ட முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் இவ்வாறு கூறினார். இதில், குறைந்தது 165 பேர் பலியாகினர் மற்றும் 225க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

மேலும், சவுதி அரேபியாவில் முஸ்லிம்களின் மிகப் புனித இடங்களில் ஒன்றாகக் கருதப்படும் மதினா நகரில் உள்ள முகமது நபி மசூதிக்கு வெளியே, இத்திங்களன்று மூன்று தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.  

ஆதாரம் : Asianews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.