2016-07-02 15:16:00

தேசிய மால் செப நிகழ்வில் கலந்துகொள்ள இளையோர்க்கு அழைப்பு


ஜூலை,02,2016. அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தலைநகர் வாஷிங்டன் நகரில் நடைபெறவிருக்கும் கிறிஸ்தவ ஒன்றிப்பு நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு, அந்நாட்டு இளையோர்க்கு அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இம்மாதம் 16ம் தேதி, வாஷிங்டன் நகர் தேசியப் பூங்காவில் பல்வேறு கிறிஸ்தவ சபைகள் இணைந்து நடத்தும் செபம் மற்றும் பயிற்சிப் பாசறையில் கலந்துகொள்ளும் பல்லாயிரக்கணக்கான மக்களுடன், இளையோரும் கலந்துகொண்டு, கிறிஸ்து அனுபவம் பெறுமாறும் கூறியுள்ளார் திருத்தந்தை.

இளையோரின் மனதில் ஏதோ ஒன்று இருந்து அவர்களை இயக்குகின்றது எனவும், அது, அவர்களை விறுவிறுப்புடன் இயங்கச் செய்கின்றது எனவும், இந்த விறுவிறுப்பைப் புரிந்துகொள்வதற்கு இச்செப நிகழ்வில் கலந்துகொள்ளுங்கள் என, தான் கூற விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

இக்கிறிஸ்தவ ஒன்றிப்பு நிகழ்வுக்கான காணொளிச் செய்தியில் இவ்வாறு திருத்தந்தை இளையோர்க்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.