2016-06-30 15:46:00

திருத்தந்தை - அர்மேனிய அப்போஸ்தலிக்கத் திருஅவைக்கு நன்றி


ஜூன்,30,2016. இவ்வியாழன் காலையில், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு யூபிலி மறைக்கல்வியுரையில், தனது அண்மை அர்மேனியத் திருத்தூதுப் பயணம் பற்றியும் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ். கடந்த வார இறுதியில், அர்மேனியாவுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டேன். அர்மேனியா, கிறிஸ்தவ விசுவாசத்தை முதலில் தழுவிய நாடு மற்றும் அந்நாட்டினர், பெருந்துன்பங்கள் மத்தியிலும், விசுவாசத்தில் நிலைத்திருப்பவர்கள். அண்மை வருங்காலத்தில், ஜார்ஜியா மற்றும் அஜர்பைஜான் நாடுகளுக்குச் செல்வதற்கும் திட்டமிட்டுள்ளேன். இந்நாடுகளின் பழமைவாய்ந்த கிறிஸ்தவ மூலங்களை உறுதிசெய்து, அனைவருக்கும் மதிப்பளிக்கும் உணர்வில், அமைதி மற்றும் ஒப்புரவுக்கு எடுக்கப்படும் ஒவ்வொரு முயற்சிக்கும் ஆதரவளிக்கும் நோக்கத்தில் செல்கிறேன். அர்மேனியத்  திருத்தூதுப் பயணத்தில், அந்நாட்டு அப்போஸ்தலிக்கத் திருஅவை எனக்களித்த வரவேற்புக்கும், நட்புக்கும் நன்றி செலுத்துகிறேன். எல்லா இடங்களிலும் கிறிஸ்தவர்கள், விசுவாசத்தில் உறுதியாய் இருக்கவும், நீதியும் அமைதியும் நிறைந்த சமுதாயத்திற்காக உழைக்கவும் அவர்களுக்கு வலிமை அருளும்படியாக, அன்னை மரியாவிடம் செபிக்கிறேன். இவ்வாறு, தனது அர்மேனியத் திருத்தூதுப் பயணம் பற்றிக் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.