2016-06-27 16:03:00

கடந்த கால தவறுகளுக்காக மன்னிப்பை வேண்டுவோம்


ஜூன் 27, 2016. அர்மேனிய நாட்டுக்கான திருத்தூதுப்பயணத்தை முடித்து திரும்பும் வழியில் விமானத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ட்டின் லூத்தர், மற்றும், இன்றைய திரு அவையில் பெண் தியோக்கியோன்களை அங்கீகரிப்பது குறித்த கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

மார்ட்டின் லூத்தர் வாழ்ந்த காலத்தில் இருந்த திருஅவையில் பல்வேறு தீய நடவடிக்கைகளால் அது காயப்பட்டிருந்தபோது, அதைக் குணப்படுத்துவதற்குரிய மருந்தை பரிந்துரைப்பவராக மார்ட்டின் லூத்தர் இருந்தார் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றையை திருஅவையில் பெண் தியாக்கியோன்கள் என்ற கேள்விக்கு, அவர்களின் ஆலோசனைகளைப் பெறும் நோக்கில் புதிய அவை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

ஒரே பாலின நடவடிக்கையாளர்களை குற்றம் சுமத்த நமக்கு எவ்வித உரிமையுமில்லை என்பதையும் வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  அவர்களை புரிந்துகொண்டு, மேய்ப்புப்பணி அக்கறையுடன் செயல்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

ஒரே பாலின நடவடிக்கையாளர்கள் நடத்தப்பட்ட விதத்திற்காக நாம் அவர்களிடம் மன்னிப்பு கேட்பதோடு, இந்த உலகத்தில் குழந்தைகள், ஏழைகள் முதலானோர் தவறான முறையில் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் நிலைகளுக்காகவும் நாம் மன்னிப்பை இறைஞ்ச வேண்டும் எனவும் வலியுறுத்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

போலந்து பயணத்தின்போது, நாத்சி வதை முகாம்களை சந்தித்து, அங்கு அமைதியாக தான் செபிக்க விழையும் அந்த நாளுக்காகக் காத்திருப்பதாகவும், பத்திரிகையாளர்களிடம் மேலும் கூறினார், திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.