2016-06-25 12:47:00

பொதுக்காலம் - 13ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


சில ஆண்டுகளுக்கு முன், என் நண்பர் ஒருவர் என்னிடம் பகிர்ந்துகொண்ட வேதனையான நிகழ்ச்சி இது. தமிழில் ஒரு புதுத் திரைப்படம் வெளியாவதற்கு முந்தின நாள், அந்தத் திரைப்படத்தின் விளம்பரச் சுவரொட்டிகளை இரவு முழுவதும் ஒட்டிக் கொண்டிருந்தார் ஓர் இளைஞர். அடுத்த நாள், அந்த ஹீரோவின் படத்தை முதல் காட்சியில் பார்க்கும் ஆர்வத்தில் (வெறியில்??) கோடை வெயிலில், பல மணி நேரம் வரிசையில் நின்று, டிக்கட் வாங்கிவிட்டார். முதல் காட்சிக்கு டிக்கட் பெறும்வரையில் அவர் அவராகவே இல்லாததால், பசி, உறக்கம் என்ற தன் தேவைகள் அனைத்தையும் மறந்திருந்தார். டிக்கட் வாங்கிய பிறகுதான் அவருக்கு தன் உடல் பசி தெரிந்தது. காட்சி ஆரம்பமாவதற்குள், ஒரு டீயும், பன்னும் சாப்பிடலாம் என்று அவர் அந்தத் திரை அரங்கத்தின் முன் இருந்த கடைக்குச் செல்ல, சாலையைக் கடக்கும்போது, மயக்கத்தில் தடுமாறி, அந்தப் பக்கம் வேகமாக வந்த ஒரு லாரியில் அடிபட்டு... அந்த இடத்திலேயே இறந்தார்.

இரசிகர்கள் என்ற பெயரில், சினிமா நடிகர்களுக்காக, அல்லது விளையாட்டு (கிரிக்கெட், கால் பந்தாட்டம்) வீரர்களுக்காகக் கூடும் கூட்டத்தைப் பார்த்திருக்கிறோம். அந்தக் கூட்டத்தில் காணப்படும் ஆர்வம், சில சமயம் வெறியாக மாறும்போது, அங்கு வெடிக்கும் வன்முறைகளில் ஒரு சில உயிர்கள் பறிபோயுள்ளன. இது, பல நாடுகளிலும் காணப்படும் அவலம்.

சினிமா, விளையாட்டு இவற்றால் அழியும் உயிர் பலிகளைவிட, அரசியல் விளையாட்டில் இன்னும் அதிகமாக உயிர்கள் பலியாவதை இந்தியாவில் பார்த்து வருகிறோம். அரசியல் தலைவர்களுக்காகத் தீ குளிப்பது, ஒருவரை ஒருவர் வெட்டிக் கொல்வது... என்று நடக்கும் உயிர் பலிகள் நம்மை நிலை குலைய வைக்கின்றன.

தலைவன், தொண்டன், உயிர்பலி இவற்றைப்பற்றி ஏன் இந்த விவாதம்? இன்றைய நற்செய்தி, இயேசு என்ற தலைவனையும், அவரைத் தொடரும் சீடர்களையும், தொடர விழையும் ஏனைய இளையோரையும் மையப்படுத்தி அமைந்துள்ளது. லூக்கா நற்செய்தி 9ம் பிரிவில் நாம் வாசிக்கும் இப்பகுதியில், நான்கு நிகழ்வுகள் கூறப்பட்டுள்ளன. ஒவ்வொரு நிகழ்விலும் நமக்குத் தேவையான பல பாடங்கள் உள்ளன.

முதல் நிகழ்வு, இயேசுவின் சீடர்களைப் பற்றியது. இயேசு எருசலேமுக்குச் செல்லும் வழியில், ஓர் ஊரில் அவருக்குச் சரியான வரவேற்பு இல்லை. உடனே, அவரது சீடர்கள் யாக்கோபு, யோவான் இருவரும் ஆவேசத்தோடு இயேசுவிடம் வந்து, “ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா?” என்று கேட்டார்கள். (லூக்கா 9: 54) யாக்கோபு, யோவான் இருவரும் 'இடியின் மக்கள்' என்ற பெயர் தாங்கியவர்கள் அல்லவா? எனவேதான் இந்த ஆவேசம். நினைவிருக்கிறதா? இந்த இருவரும்தான் இயேசுவின் வலப்பக்கமும், இடப்பக்கமும் அமர விரும்பியவர்கள். (மத். 20: 20-21)

நம்ம ஊர் அரசியல் தலைவர் என்றால், தொண்டர்களின் இத்தகைய ஆவேசத்தைக் கண்டு, அதுவும், தலைவனுக்காக ஊரையேக் கொளுத்தத் துடிக்கும் அவர்களது ஆவேசத்தைக்  கண்டு உள்ளம் குளிர்ந்து, அவர்கள் விரும்பிய அப்பதவிகளை ஒதுக்கிக்  கொடுத்திருப்பார். இயேசு நம்ம ஊர் அரசியல் தலைவர் இல்லையே... அவர் உலகத் தலைவர்கள் அனைவரையும் விட, மிகவும் வித்தியாசமானவர் ஆயிற்றே!

ஆவேசப்பட்ட சீடர்களுக்கு இயேசு தந்த பதில் என்ன? அவர் அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்து கொண்டார். (லூக்கா 9: 55) அவர் கடிந்து கொண்டதற்குக் காரணம் இருந்தது. அந்த ஊரை அழிப்பதற்கு, வானத்திலிருந்து சக்தியைக் கொண்டு வர நினைத்தனர், அந்தச் சீடர்கள். கடவுளின் சக்திகளைத் தவறான நோக்கங்களுக்கு, அதுவும் அழிவு நோக்கங்களுக்குப் பயன்படுத்த எண்ணிய அவர்களது சுயநலத்தை இயேசு அதிகம் கடிந்துகொண்டார்.

தொண்டர்களின் ஆர்வம், ஆவேசம், தங்களிடம் உள்ள அதிகாரம்... இவற்றை அழிவுக்குப் பயன்படுத்தும் தலைவர்களை எண்ணி நாம் வெட்கப்படுகிறோம். இந்தத் தன்னலத் தலைவர்களுக்காக, தங்கள் உயிரையும், பிற உயிர்களையும் பலியாக்கும் தொண்டர்களையும் எண்ணி வெட்கப்படுகிறோம். வேதனைப்படுகிறோம்.

இது மட்டுமல்ல, தாங்கள் அழிவை உருவாக்காமல் இருந்தாலும், பிற வழிகளில் மக்கள் சந்திக்கும் ஆபத்தையும், அழிவையும் தங்கள் ஆதாயமாக்கிக் கொள்ளும் தலைவர்களையும் நாம் காண்கிறோம். கடந்த ஆண்டு இறுதியில், தமிழ்நாட்டை உருகுலையச் செய்த வெள்ளத்தில், அரசியல் தலைவர்கள் மேற்கொண்ட விளையாட்டு, நம் மனங்களை இரணமாக்கின. இயற்கை அழிவையும் தங்கள் ஆதாயமாக்கும் இந்த அரசியல் தலைவர்களின் உள்ளங்களில் அடிப்படை மனித உணர்வுகளை இறைவன் விதைக்கவேண்டும் என்று மன்றாடுவோம்.

இரண்டாவது நிகழ்வு: இயேசுவைத் தொடர நினைக்கும் ஓர் இளைஞன், "நீர் எங்கே சென்றாலும், நானும் உம்மைப் பின்பற்றுவேன்" என்று சொல்கிறார். இயேசு அவரை ஆதங்கத்துடன் பார்க்கிறார். "எங்கே சென்றாலும்..." என்று அந்த இளைஞன்  சொன்னதுதான் அந்த ஆதங்கத்திற்குக் காரணம்... தான் எங்கே போகிறோம் என்பது இயேசுவுக்குத் தெளிவாக இருந்தது. அவர் எருசலேம் நோக்கிச் செல்ல தீர்மானித்துவிட்டார் என்று இன்றைய நற்செய்தியின் முதல் வரிகளில் வாசிக்கிறோம். எருசலேம் நோக்கிச் செல்வது, அங்கிருந்த அதிகாரங்களுடன் மோதுவதற்கு. இந்த மோதலில் தனக்கு என்ன நிகழும் என்பதையும் இயேசு ஓரளவு உணர்ந்திருந்தார். இந்த நேரத்தில், இந்த மோதலில், இன்னும் ஒரு தொண்டரை ஈடுபடுத்த வேண்டுமா என்பதுதான் இயேசுவின் ஆதங்கம்.

மீண்டும் நம்ம ஊர்த் தலைவர்கள் நம் நினைவுக்கு வருகின்றனர். போராட்டங்களை முன்னின்று நடத்தி, அடிபட்ட தலைவர்கள் ஆயிரத்தில் ஒருவராக, இல்லை, இல்லை... இலட்சத்தில் ஒருவராகத்தான் இருப்பர். பொதுவாக, போராட்டம்,  எதிர்ப்பு, மோதல் என்று வந்தால், தொண்டர்களை அந்த மோதலில் ஈடுபடுத்திவிட்டு, ஒதுங்கிக்கொள்வது நம் தலைவர்களின் இலக்கணம். இயேசு, இத்தகையத் தலைவர் இல்லை...

தன் போராட்டத்தைப்பற்றி மறைமுகமாகச் சொல்லி, அதில் பங்குபெற இயேசு அந்த இளைஞனுக்கு விடுக்கும் அழைப்பு அழகானது: இயேசு அவரிடம், “நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிடமகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை” என்றார். (லூக்கா 9: 58) பறவைகளும், மிருகங்களும் பாதுகாப்பற்றச் சூழலில் ஒவ்வொரு மணித்துளியும் வாழ்கின்றன. எந்த நேரத்தில் அவற்றின் உயிர் வேட்டையாடப்படும் என்பது தெரியாது. இவ்விதம் நாள் முழுவதும் பாதுகாப்பற்று வாழும் இவ்வுயிர்கள், மாலையில் திரும்பிச் செல்லும்போது, கூடுகளும், பதுங்குக் குழிகளும் பாதுகாப்பு தருகின்றன. தனக்கு அந்தப் பாதுகாப்பு கூட இல்லை என்பதை இயேசு தெளிவாக்குகிறார். இன்றைய அரசுத் தலைவர்களோடு ஒப்பிட்டால், இயேசுவை, பிழைக்கத் தெரியாதத் தலைவர் என்று முத்திரை குத்தலாம்.

பிழைக்கத் தெரியாத தலைவர் என்று எண்ணிப்பார்க்கும்போது, இந்தியாவில் திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சர் நினைவுக்கு வருகிறார். இம்மாநிலத்தின் முதலமைச்சராக நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருவாளர் மானிக் ஷொர்கார் (Manik Sarkar) அவர்களைப் பற்றிய விவரங்கள் நம்மை ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன. சொந்த வீடு எதுவுமில்லாதவர். வங்கிக் கணக்கில் இவரிடம் உள்ள தொகை ரூபாய் 10,000க்கும் குறைவு. ஆம்... நான் எந்த பூஜ்யத்தையும் தவற விடவில்லை... அது பத்தாயிரம்தான். கோடியில் ஒருவராய் இருக்கும் இவரைப் போன்ற தலைவர்களுக்கு நேர்மாறாக, கோடி, கோடியாய் சேர்த்திருக்கும் தலைவர்களை நமக்குத் தெரியும்.

சில ஆண்டுகளுக்கு முன் வெளியான ஒரு தகவலின்படி, (Mail Online - 29, September, 2012) அமெரிக்க அரசுத்தலைவரையும், அவரது குடும்பத்தையும் ஓராண்டு பாதுகாக்க, மக்கள் வரிப்பணத்திலிருந்து 140 கோடி டாலர்கள் செலவாகின்றன என்றும், பிரித்தானிய அரசக் குடும்பத்தைப் பாதுகாக்க 6 கோடி டாலர்கள் செலவாகின்றன என்றும் தெரிய வந்துள்ளது. இத்தலைவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் உண்மையான பாதுகாப்பு உணர்வுடன் ஒவ்வொரு நாளும் உறங்கச் செல்கின்றனரா என்பது பெரும் கேள்விக் குறியே! இத்தகையச் செய்திகளை வாசிக்கும்போது, தலைவர்களின் உண்மையான பாதுகாப்பு எதில் அடங்கியுள்ளது என்ற கேள்வியும் எழுகின்றது!

மூன்றாவது, நான்காவது நிகழ்வுகள்: இச்சம்பவங்களில் இரு இளையோர் தங்கள் குடும்பம் சார்ந்த கடமைகளை, கணக்குகளை முடித்துவிட்டு, இயேசுவைப் பின்தொடர விழைகின்றனர். இயேசு அவர்களிடம் சொல்லும் பதில்களை மேலோட்டமாகப் பார்க்கும்போது, கடுமையான வார்த்தைகளாக ஒலிக்கின்றன.

தன் பெற்றோரை அடக்கம் செய்துவிட்டு வர விழையும் இளைஞனிடம் "இறந்தோரைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்." என்கிறார் இயேசு. வீட்டாரிடம் விடைபெற்று வர விழைந்த மற்றோருவரிடம், "வேண்டாம். இப்போதே புறப்படு. பின்னால் திரும்பிப் பார்க்காதே." என்று சொல்கிறார்.

இந்த ஞாயிறுத் திருப்பலியில் நாம் வாசிக்கும் முதல் அரசர் நூலில் ஒரு நிகழ்வு கூறப்பட்டுள்ளது. எலிசா என்ற இளைஞன் தன் வயலில் ஏர் பூட்டி உழுது கொண்டிருந்தார். எலியா என்ற இறைவாக்கினர் வந்து அவரை இறைவாக்கு உரைப்பவராகத் தேர்ந்து கொண்டார். "நான் என் தாய் தந்தையிடம் விடைபெற்று வர அனுமதி தாரும்." என்று கேட்கும் எலிசாவுக்கு, அந்த அனுமதியை எலியா கொடுத்தாரா என்பது சரிவரத் தெரியவில்லை. ஆனால், அதைத் தொடர்ந்து, எலிசா செய்த செயல் வியப்பைத் தருகிறது.

அரசர்கள் முதல் நூல் 19: 21

எலிசா எலியாவை விட்டுத் திரும்பி வந்து, ஏர் மாடுகளைப் பிடித்து, அடித்துத் தாம் உழுத கலப்பைக்கு நெருப்பு மூட்டி, அம்மாட்டு இறைச்சியைச் சமைத்து, மக்களுக்குப் பரிமாற அவர்களும் அதை உண்டனர். பின்பு அவர் புறப்பட்டுப் போய் எலியாவைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்யலானார்.

எலிசாவின் இந்தச் செயலை மனதில் வைத்து, இயேசு “கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல” (லூக்கா 9: 58) என்ற வரிகளைச் சொல்லியிருக்கலாம். இயேசுவைப் பின்பற்றுவது, அவரைப்போல வாழ முற்படுவது மிக, மிக உயர்ந்ததோர் எண்ணம். அந்த எண்ணம் மனதில் தோன்றினால், தாமதிக்க வேண்டாம். நல்லது ஒன்று செய்ய வேண்டும் என்று மனதில் பட்டால், அதை உடனடியாகச் செய்து விடுவது மிகவும் நல்லது. மாறாக, அதை ஆறப்போட்டால்... ஆற்றோடு போய்விடும். அதாவது, நமது ஏனைய எண்ணங்கள், கவலைகள், கணக்குகள், வாழ்வின் நிர்ப்பந்தங்கள் என்ற அந்த வெள்ளம் இந்த நல்லெண்ணத்தை ஆற்றோடு கொண்டுசெல்ல வாய்ப்புண்டு.

நம் வாழ்வைச் சூழும் வெள்ளத்தில் நமது நல்லெண்ணங்கள் அடித்துச் செல்லாமல் இருக்க, எதிர் நீச்சல் போடவேண்டியிருக்கும். கல்வியாண்டைத் துவங்கியுள்ள இளையோரே, உங்கள் கல்வி, பொழுதுபோக்கு, வாழ்க்கைமுறை என்ற பல தளங்களிலும் உங்களுக்குள் உருவாகும் நல்லெண்ணங்களை உடனுக்குடன் செயலாற்றுங்கள். ஒருமுறை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய நண்பகல் மூவேளை செபத்தின் இறுதியில், புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரம் இளையோரிடம் சிறப்பான ஓர் அழைப்பை விடுத்தார். திருத்தந்தையின் இந்த வார்த்தைகளுடன் இன்றைய ஞாயிறு சிந்தனையை நிறைவு செய்வோம்:

"நான் சொல்வதை நன்கு நினைவில் கொள்ளுங்கள். வெள்ளமெனச் செல்லும் உலக போக்கிற்கு எதிராக, எதிர் நீச்சல் போட தயங்கவேண்டாம். துணிவு கொள்ளுங்கள்... கெட்டுப்போன உணவை நாம் உண்பது கிடையாது. அதேபோல், கெட்டுப்போன விழுமியங்களை மனதில் சுமந்து வாழவேண்டாம். முன்னேறுங்கள்!"

ஒன்றே செய்யினும், நன்றே செய்க; நன்றே செய்யினும், இன்றே செய்க.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.