2016-06-23 13:09:00

இது இரக்கத்தின் காலம் : மனக் காயத்தை குணப்படுத்தல் எளிதா?


அறிவியலாளர் தாமஸ் ஆல்வா எடிசன், ஆயிரம் முறைகளுக்கு மேல் தோல்வி கண்டு, பெரும் முயற்சிக்குப்பின் மின்சார பல்பை கண்டுபிடித்தார். அந்த மின்சார பல்பை ஒளிர வைத்துக் காட்டுவதற்காக, அவர், தனது நண்பர்களுக்கும், சக அறிவியலாளர்களுக்கும், ஒரு சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். அந்தச் சந்திப்பு அவரது ஆய்வகத்தின் மேல்தளத்தில் நடந்தது. எடிசன், தனது உதவியாளரை அழைத்து, மின்சார பல்பை மேல்தளத்திற்குக் கொண்டு வரச்சொன்னார். பல்பைக் கொண்டு வரும்போது, அது கை தவறி விழுந்து உடைந்து விட்டது. அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் எடிசன் சற்றும் திகைக்கவில்லை. ஆயிரம் தோல்விகளைச் சந்தித்து வெற்றி கண்ட அவருக்கு மின்சார பல்பை மீண்டும் உருவாக்குவது எளிதாக இருந்தது. சிறிது முயற்சி செய்து ஒரு பல்பை உடனடியாக உருவாக்கினார். அதனை மீண்டும் அந்த உதவியாளரிடமே கொடுத்து மேலே எடுத்துவரச் சொன்னார். பல்பை கீழே போட்டு உடைத்தவனிடமே மீண்டும் அந்த வேலையைக் கொடுக்கிறீர்களே? என்று சிலர் எடிசனிடம் கேட்டுவிட்டனர். அதற்கு எடிசன், ‘பல்பு உடைந்தது. அதை என்னால் மீண்டும் செய்து கொள்ள முடிந்தது. ஆனால் அவரது மனதைக் காயப்படுத்திவிட்டால் அதை என்னால் சரிசெய்து கொடுத்துவிட முடியுமா? மீண்டும் அவரிடமே பணியைக் கொடுத்தால் அவர் தனது பொறுப்பையும், எனது நம்பிக்கையையும் உணர்ந்து கூடுதல் கவனத்துடன் பணிபுரிவார். அதனால்தான் அப்படிச் செய்தேன்’என்றார். எடிசனுக்கு வெற்றியை பெற்றுத்தந்த பொறுமையின் எல்லையை அப்போதுதான் மற்றவர்கள் முழுமையாகப் புரிந்து கொண்டனர். அன்பர்களே, எப்போதும் பிறருக்கு நம்மால் உதவி செய்ய முடியாது. ஆனால், எப்போதும் நம்மால் இதமாகப் பேச முடியும். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.